தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கையடக்க கணினி எனும், 'டேப்' வாங்க, ஒரு வாரத்தில் டெண்டர் முடிவு செய்யப்படும் என்றும் 3000 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், , தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளை தரம் உயர்த்த, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தற்போது, அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி படிக்க, மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் அதனால் ஆங்கில வழி வகுப்புகளை, இரண்டு மடங்காக உயர்ந்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறிய செங்கோட்டையன் இதையடுத்து இரண்டு வகுப்புகள் கூடுதலாக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மாநில அளவில், 3,000 பள்ளிகளில், 'ஸ்மார்ட் கிளாஸ்' நடத்தப்படும். ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் வந்துள்ளதால், அம்மாணவர்கள், 'க்யூ ஆர் கோடு' மற்றும் இணையதளம் வழியே கல்வி பயில, கையடக்க கணினி எனும், 'டேப்' வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
இதற்காக, அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, இந்த வாரம் டெண்டர் முடிவு செய்யப்படும். விரைவாக, 'டேப்' வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.