சில கருப்பு ஆடுகளால் ஆசிரியர் சமுதாயத்திற்கே அவமானம்.. விரைந்து தண்டனை கொடுங்க. ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jun 7, 2021, 11:02 AM IST
Highlights

பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விசாகா கமிட்டி  பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை, அனைத்துப்பள்ளிகளிலும் கமிட்டி அமைத்து அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

கடந்த சில தினங்களாக தமிழ்நாட்டில் பள்ளி ஆசிரியர்கள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபால், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்,  பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றிய கெபிராஜ், சென்னை ப்ரைம் தடகள பள்ளி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் என பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆசிரியர்களின் பட்டியல் நீண்டு கொண்டிருப்பது மிகுந்த அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.  

மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஆசிரியர் அண்ணாதுரை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார், மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற தமிழ்ச் சமுதாயம் காலங்காலமாக போற்றி வணங்கி கொண்டிருக்கும் உயர்ந்த தொழிலை செய்து கொண்டு இருப்பவர்கள் ஆசிரியர்கள். அதற்கு இலக்கணமாக இன்றைக்கும் மிக பெரும்பாலான ஆசிரியர்கள் தங்கள் பணியை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் இத்தகு இழி செயலால் ஆசிரியர் சமுதாயமே மிகப் பெரிய மன வேதனைக்கு உள்ளாக்கி வேண்டியுள்ளது. ஆசிரியர், மாணவர் உறவு என்பது பெற்றோர் குழந்தைகள் உறவைப் போன்றது, அதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு அவற்றின்மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோன்று ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இனிமேலும் இது போன்ற பாலியல் குற்றங்கள் பள்ளிகளில் ஏற்படாமல் தடுக்க தமிழக அரசு கீழ்க்காணும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்:

1.பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிப்பதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும், அக்குழுவில் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் குழந்தைகள் உரிமை செயல்பாட்டாளர்கள் மாணவர் பிரதிநிதிகள் ஆகியோர் இடம் பெறவேண்டும்.

2. பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள விசாகா கமிட்டி  பெரும்பாலான பள்ளிகளில் செயல்பாட்டில் இருப்பதாக தெரியவில்லை, அனைத்துப்பள்ளிகளிலும் கமிட்டி அமைத்து அதை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

3. பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்த மாநில அளவில் ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்து அதன் பரிந்துரைகளை பெற்று அவற்றை அனைத்து பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

4. பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
 

click me!