தனிக்கட்சி என்றால் ரஜினிக்கு நோ... ஆடிட்டரிடம் பாஜக மேலிடம் கறார்..!

By Selva KathirFirst Published Jun 10, 2019, 10:52 AM IST
Highlights

தனிக் கட்சி துவங்கினால் ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் முடிவிலிருந்து பாஜக பின் வாங்கியுள்ளது.

தனிக் கட்சி துவங்கினால் ரஜினிக்கு மறைமுக ஆதரவு கொடுக்கும் முடிவிலிருந்து பாஜக பின் வாங்கியுள்ளது.

தமிழகத்தில் காலூன்ற வலுவான ஒரு தலைவர் தேவை என்கிற நிலையில் ரஜினியை முன்னிலைப்படுத்த பாஜக வியூகம் வகுத்து இருந்தது. ரஜினியின் நண்பரும் ஆடிட்டர் ஒருவரும் இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பாஜக மேலிடம் கொடுத்த சில வாக்குறுதிகளை தொடர்ந்து ரஜினி அரசியலில் ஈடுபடுவதாக அறிவித்தார். 

தனிக்கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ரஜினி பிரகடனப்படுத்தினார். கடந்த மாதம் கூட செய்தியாளர்களிடம் பேசும்போது சட்டப்பேரவைத் தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ளத் தயார் என்று ரஜினி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகளை ஆடிட்டர் தீவிரப்படுத்தி வருகிறார். 

இதற்காக பாஜக மேலிடத்தை அணுகிய ஆடிட்டர் மோடி பிரதமராகப் பதவியேற்ற மறுநாள் ரஜினியை சந்திக்கவும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதற்கு காரணம் ரஜினி தனிக் கட்சி என்கிற முடிவில் உறுதியாக இருந்ததுதான். பாஜகவில் இணைந்து தேர்தலை எதிர் கொண்டால் ரஜினியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பதுடன் அவரை முதலமைச்சராகவும் ஆக்குவதாக சக்தி வாய்ந்த ஒரு தலைவர் ஆடிட்டரிடம் கூறியுள்ளார். 

ஆனால் ரஜினி தனிக்கட்சி தான் என்று உறுதியாக இருந்தால் தங்களிடமிருந்து தார்மீக ஆதரவு மட்டுமே கிடைக்கும் என்றும் மற்ற எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது என்றும் ஆடிட்டரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரஜினிக்கு உடனடியாக செய்யப்பட்டது. எனவே ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டில் புதிய வியூகம் வகுக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

click me!