Girl suicide:பள்ளியில் மத பிரச்சாரம் செய்யப்படவில்லை..அப்படி எந்த புகாரும் இதுவரை வரவில்லை - பள்ளிகல்வித்துறை

By Thanalakshmi VFirst Published Jan 27, 2022, 7:26 PM IST
Highlights

அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மதம் தொடர்பான பரப்புரை எதுவும் இல்லை என்றும் மதரீதியிலான பிரச்சாரம் தலைமையாசிரியராலோ அல்லது ஆசிரியராலோ பள்ளியில் செய்யப்படவில்லை என்றும் பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
 

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த அரியலூர் மாணவி, சில தினங்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் தங்கியிருந்த விடுதியில் வார்டன், மதமாற சொல்லி கட்டாயப்படுத்தி அனைத்து அறைகளையும் சுத்தம் செய்ய சொன்னதால், மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக அந்த மாணவி தனது மரணப்படுக்கையில் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே மாணவி மரணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்,விடுதியின் வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.

மாணவியை மதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தியதன் காரணமாக தான், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும், மாணவியின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் போராட்டம் நடைபெற்றது.இருப்பினும், மாணவியின் மரணத்திற்கு கட்டாய மத மாற்றம் காரணமில்லை என அரசு தரப்பிலும், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மரண வாக்குமூலத்தை அரசு துறையைச் சேர்ந்தவர்கள்தான் பதிவு செய்ய வேண்டும். அதையும்மீறி ஒரு சில அமைப்புகள் சென்று, அந்தக் குழந்தையைத் தூண்டும் விதமாக அப்படியிருக்குமா, இப்படியிருக்குமா என கேட்கின்றபோது, அந்தக் குழந்தை உறுதியாக எதையும் சொல்லாமல், இருக்கலாம் என்றே பதிலளித்துள்ளார். எனவே, அமைப்புகள் இதை அரசியலாக்க வேண்டாம். குழந்தையிடம் அவ்வாறு வீடியோ பதிவு செய்தது தவறு. சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை காவல்துறை எடுத்துவருகிறது. அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், காரணங்கள் எதுவாக இருந்தாலும் இழந்த அந்த உயிரை மீட்கமுடியாது. இனி இதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரித்த தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் உட்பட 16 பேர் பள்ளியில் நேரடியாக சென்று பார்வையிட்டனர்.விடுமுறையின் போது மற்ற மாணவிகள் சொந்த ஊருக்கு செல்லும் போது கூட மாணவி வீடுதியிலே தங்கியிருந்திருக்கிறார். ஜனவரி 10 ஆம் தேதி அன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மாணவி வீட்டிற்கு அழைத்து செல்லபட்டார்.பள்ளியில் பயின்ற மற்ற மாணவர்களிடம் இருந்து மதம் சார்பாக புகார் எதும் இதுவரை பெறப்படவில்லை. முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மதம் தொடர்பாக  புகார்கள் எதும் பெறப்படவில்லை. சர்ச்சைக்குள்ளான அந்த குறிப்பிட்ட பள்ளியில் கிறிஸ்துவ மாணவர்களை விட இந்து மாணவர்களே அதிகளவில் பயிலுகின்றனர். மதரீதியிலான பிரச்சாரம் தலைமையாசிரியராலோ அல்லது ஆசிரியராலோ பள்ளியில் செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

click me!