கணவர் நடராஜனின் மறைவையொட்டி பரோலில் தஞ்சை வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
நடராஜன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.
சிறை நிர்வாகம் மூன்று நிபந்தனைகளை விதித்து சசிகலாவுக்கு பரோல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 20-ந் தேதி மதியம் கார் மூலம் புறப்பட்டு இரவில் தஞ்சைக்கு வந்தார்.
தஞ்சை வந்த சசிகலா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் பரோல் காலம் முழுவதும் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். இதைத் தொடர்ந்து நடராஜனின் நினைவேந்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்றுடன் சசிகலாவுக்கு பரோல் முடிவடைந்தது.
இதையடுத்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்து இன்றுகாலை 10.30 மணிக்கு சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு செல்கிறார்.