விடுதலைக்கு பிறகு ஓசூரில் தங்கும் சசிகலா... அட இப்படியொரு ஏற்பாடா..?

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2021, 12:05 PM IST
Highlights

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.
 

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, பெங்களூரு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது. இதையடுத்து, 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை செலுத்திவிட்டால் வருகிற 27-ந் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது. விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில், தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும், அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.

ஓசூரில் 27-ந் தேதி இரவு தங்கி விட்டு, 28-ந் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் சசிகலா வருகிற 27-ந் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள் 28-ந் தேதி காலைதான் அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்றும் தெரிவித்தனர்.

click me!