
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் ஜெயலலிதா, அதிமுகவில் வகித்து வந்த பொது செயலாளர் பதவி காலியாக இருந்தது. இதை தொடர்ந்து இன்று காலை நடந்த அதிமுக பொது குழுவில், சசிகலாவை பொது செயலாளராக நியமனம் செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேறியது. அதன் பிறகு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில், முதல்வர் ஓ.பன்னீர்ச் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி, தம்பிதுரை உள்பட முக்கிய நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை சத்தித்தனர்.
அப்போது பொதுக்குழு தீர்மானத்தை சசிகலாவிடம் வழங்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். பின்னர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க தலைமை பொறுப்பேற்க முழுமனதுடன் சசிகலா ஒப்புகொண்டதாக செய்தியாளர்களிடம் கூறினார்.
இதை தொடர்ந்து வரும் 2ம் தேதி அதிமுக பொது செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்பார் என்று தெரிகிறது. பொது செயலாளராக பொறுப்பேற்க உள்ள சசிகலா, விரைவில் மாவட்ட ரீதியாக சென்று கட்சி தொண்டர்களை சந்திக்க திட்டமிடபட்டுள்ளதாககூறப்படுகிறது. இதற்கான சுற்றுப்பயண விவரம் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.