ஜெயலலிதாவைத் தவிர யாரும் இங்கே முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள்…சசிகலா உறுதி…
அதிமுக பொதுச் செயலாளராக இன்று ராயப்பேட்டை தலைமைக் கழக அலுவலகத்தில் திருமதி சசிகலா பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், அதிமுக வில் ஜெயலலிதாவைத் தவிர வேறு யாரும் முன்னிலைப்படுத்தப்பட மாட்டார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
கழகத்தை ஜெயலலிதா எந்த வேகத்தில் வழி நடத்திச் சென்றாரோ, ரானுவ கட்டுப்பாட்டுடன் கழகம் செயல்பட்டதோ அதே கட்டுப்பாட்டுடன் கழகம் வீறுநடை போடும் என தெரிவித்தார்.
ஜெயலலிதா காட்டிய வழியில் இருந்து இம்மி அளவு கூட விலகாமல் இந்த இயக்கத்தை வழிநடத்துவோம் என கூறினார். அதிமுக என்ற பேரியக்கத்தை சேர்ந்த கழகத் தொண்டர்களை கண் இமை போல் பாதுகாப்போம் என்றார்.
கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் நுற்றாண்டு விழா அதிமுக சார்பில் 2017 ஆம் முழுவதும் கொண்டாடப்படும் என்றும் இதற்காக எம்ஜிஆரின் அஞ்சல் தலை மற்றும் , நாணயம் வெளியிட மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் தெரிவித்த திருமதி சசிகலா புனிதமான பொது வாழ்வை மேற்கொள்ளப் போவதாக உறுதியளித்தார்.