சாதிக் பாட்ஷா வழக்கு தூசு தட்டப்படும்... ஸ்டாலின் சிறைக்கு செல்வார்... தமிழக அமைச்சர் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Dec 10, 2020, 8:39 AM IST
Highlights

மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கும்போது ஸ்டாலின் சிறைக்கு செல்லும் நிலைதான் ஏற்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரித்துள்ளார்.
 

தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “ஊழலின் மொத்த உருவமே திமுகதான். விஞ்ஞான ரீதியில் ஊழல் எப்படி செய்யலாம் என நிருபித்த கட்சி திமுக. சர்க்காரியா கமிஷன் விசாரணையின் போது விசாரணை நடத்திய அதிகாரியே ஆச்சரியப்படும் அளவுக்கு விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய முடியும் என உலகுக்கே எடுத்துக் காட்டியது திமுகதான். இந்திய சரித்திரத்தில் ஊழலுக்காக ஓர் ஆட்சி கலைக்கப்பட்டது என்றால், அது திமுக ஆட்சிதான்.


கண்ணுக்கே தெரியாத காற்றில் கூட ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள் திமுகவின் ராசாவும், கனிமொழியும்தான். இருவர் மீதும் வழக்கை தொடுத்தது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசுதான். ஆ. ராசாவும் கனிமொழியும் தியாகம் செய்தா திகார் சிறைக்கு சென்றார்கள்? 2ஜி வழக்கில் ஆதாரம் நிரூபிக்கப்படவில்லை என கூறி இருவரும் விடுதலை செய்யப்படவில்லை. போதிய ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று கூறிதான் நீதிமன்றம் விடுவித்தது. சிபிஐ செய்துள்ள மேல் முறையீடு வழக்கில் இருவரும் தப்பிக்க முடியாது. அந்தப் பயத்தில்தான் ஸ்டாலினும், ஆ.ராசாவும் பிதற்றுகிறார்கள்.
கடந்த 2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி உள்ளது. இந்த 10 ஆண்டுகளும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் எங்கள் மீது பல குற்றச்சாட்டுகளை கூறியும் எதையும் நிரூபிக்க முடியாமல் வாபஸ் வாங்கிய நிலைதான் உள்ளது. சட்டப்பேரவையிலேயே எதையும் நிரூபிக்க முடியாதவர்கள், மக்கள் மன்றத்தில் எப்படி நிரூபிப்பார்கள்? மக்களிடம் உண்மைக்கு மாறாக எதையும் சொல்ல முடியாது. மக்கள் திமுகவினரை நம்பத் தயாராக இல்லை. ஊழல் என்றதும் மக்களுக்கு நினைவுக்கு வருவது திமுகதான். ஊழல் பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக சார்பில் அப்பழுக்கற்ற, தெளிவான, ஊழலற்ற ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.
திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுகவினர் சிறைக்கு செல்வார்கள் என ஸ்டாலின் பூச்சாண்டி காட்டுகிறார். மக்களின் மதிப்பை பெற்று 2021-ம் ஆண்டிலும் மீண்டும் அதிமுக ஆட்சியே மலரும். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், சாதிக் பாட்ஷா கொலை வழக்கு, அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு போன்ற வழக்குகளை தூசிதட்டி மீண்டும் விசாரிக்கும்போது ஸ்டாலின் சிறைக்கு செல்லும் நிலைதான் ஏற்படும். சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திமுக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் அதிமுக பக்கம் வருவார்கள். ஜனவரிக்கு பிறகு பல கட்சிகள் அதிமுகவை நோக்கி படையெடுத்து வருவதை நீங்கள் பார்ப்பீர்கள். அதிமுக தலைமையிலான கூட்டணி மகத்தான கூட்டணியாக வெற்றி கூட்டணியாக இருக்கும்.” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

click me!