திருப்பியடிக்கும் வரலாறு... வெளிச்சத்துக்கு வந்த திமுகவின் இரட்டை நிலைப்பாடு..!

By Thiraviaraj RMFirst Published Nov 9, 2020, 3:42 PM IST
Highlights

 தி.மு.க. தலைவர் நாடகமாடுவது மட்டுமின்றி உண்மையில் அக்கறை இருக்கும் அ.தி.மு.க. வையும் அரசியலுக்காக குற்றம் சாட்டிவருகிறார். இப்போது வரலாறு தி.மு.க.வை திரும்பி அடிக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விதமாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித், தமிழக அரசு அனுப்பிவைத்த பரிந்துரையை ஏற்கவேண்டும் என்று இன்றைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஏதோ அவர்கள் மீது உண்மையில் அக்கறை உள்ளது போல நாடகமாடி வருகிறார். தி.மு.க.விற்கு உண்மையிலேயே எழுவர் விடுதலை குறித்து அக்கறை உள்ளதா? என கேள்வி எழுகிறது. 

ஏம்ப்ரல் 19, 2000 அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவை நளினியின் மரண தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாக மாற்றக்கோரி பரிந்துரைக்க முடிவு செய்கிறது. மற்ற 6 பேரின் தண்டனையை பற்றி எந்த பரிந்துரையும் செய்யவில்லை.

2010 மார்ச் 30 நளினியின் விடுதலைக்காக அவர் அனுப்பிய கருணை மனுவை, அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு மனிதநேயமின்றி நிராகரித்தது.  2020 நவம்பர் 5 அன்று தந்தையின் நிலைப்பாடு என்னவோ, அதற்கு நேரெதிரான நிலைப்பாட்டை கொண்டு, இன்று செயல்பட்டு வருகிறார் ஸ்டாலின்.

ஆனால், உண்மையில் எழுவர் விடுதலையில் அக்கறைகொண்ட அ.இ.அ.தி.மு.க, பிப்ரவரி 2014 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால், இந்த வழக்கு  பிரதமரின் கொலைவழக்கு என்பதாலும், சி.பி.ஐ. போன்ற மத்திய விசாரணை முகமைகள் விசாரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாலும், அவர்களை விடுதலை செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட்டது.

 

இப்படி இருக்கையில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  அமைச்சரவை கூடி எழுவரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கவேண்டுமென ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநரை முடிவெடுக்கும் படி அறிவுறுத்தமுடியாது என நீதிமன்றம் கூறியும் ,தமிழக அரசு தொடர்ந்து எழுவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் காங்கிரசுடன் கூட்டணியிலிருந்த தி.மு.க. அவர்களை விடுவிக்க என்ன செய்தது ? அப்போதைய முதல்வர் கருணாநிதி எழுவர் விடுதலைக்காக உதவி செய்யாமல் துரோகம் செய்துள்ளார். ஆனால், இப்போது உண்மையில் அக்கறை இருப்பது போல தற்போதைய தி.மு.க. தலைவர் நாடகமாடுவது மட்டுமின்றி உண்மையில் அக்கறை இருக்கும் அ.தி.மு.க. வையும் அரசியலுக்காக குற்றம் சாட்டிவருகிறார். இப்போது வரலாறு தி.மு.க.வை திரும்பி அடிக்கிறது.

click me!