இன்று மீண்டும் திறக்கப்படுகிறது டாஸ்மாக் கடைகள்? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு..!

By Thiraviaraj RMFirst Published May 9, 2020, 9:43 AM IST
Highlights

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது. 

டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது. 

பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகள், எதிர்க்கட்சிகளின் கண்டனங்களையும் மீறி போலீஸ் பந்தோபஸ்துடன் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஒரே நாளில் அண்டை மாநிலங்களைவிட தமிழகம் மதுபான விற்பனையில் நேற்று சாதனையும் புரிந்தது. ஆனால் பல்வேறு விமர்சனங்களை தமிழக அரசு சந்தித்தது. மதுக்கடைகளை திறக்க கூடாது என்று பொதுநல வழக்கு ஒன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது.

அதேசமயம் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக கமல் ஹாசனின் மநீம வழக்கு ஆதார் கார்டு 3 நாளைக்கு ஒருமுறை ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே விற்க வேண்டும், வாங்குபவரின் பெயர், முகவரி, ஆதார் எண்ணுடன் ரசீது தரப்பட வேண்டும், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தும் வசதியை டாஸ்மாக் ஏற்படுத்த வேண்டும், அப்படி செலுத்தினால் 2 பாட்டில்கள் பெற்றுக்கொள்ளலாம், சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், மதுபானக் கடைகளின் இந்த விற்பனையை ஹைகோர்ட் என்றும் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் இது சம்பந்தமான வழக்கும் விசாரணை மே 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. ஆன்லைன் அதேசமயம், டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு எதிர்ப்பு, அதிருப்திகளுக்கிடையே 44 நாட்களுக்கு பிறகு 7ம் தேதி சென்னை தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதற்கு பெண்களும், பொதுமக்களும் ஆங்காங்கே இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். எனினும் போலீஸ் பாதுகாப்புடன் சென்னையை தவிர மற்ற இடங்களில் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது சமூக விலகல் என்பது மொத்தமாக காற்றில் பறந்தது.  டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சிறப்பு வழக்கை தாக்கல் செய்தது. அந்த மனு தொடர்பாக கட்சி சார்பில் ஒரு அறிக்கையும் வெளியானது. அதில், 'ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இன்றோடு 44 நாட்கள் ஆன நிலையில் மருத்துவர்களும், காவல்துறைப் பணியாளர்களும், தூய்மைப் பணியாளர்களும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நோய்த்தொற்று கொரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி அரசு சொன்னதைக் கேட்டு, நடுத்தர மக்கள் வீட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏழைகள் வாழ்வாதாரத்தைத் தொலைத்து வாழ வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இத்தனை நாள் போராடி நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பாக இருந்ததையும் மக்களின் துயரங்களை மதிக்காமலும் ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளைத் திறந்து விட்டு இருக்கின்றது அரசு. இதைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் திறப்புக்கு எதிராக மநீம சார்பாக சிறப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நேற்று மதுக்கடைகளில் எந்தவித சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை என்பதற்கான வீடியோ, போட்டோ ஆதாரங்கள் நீதிபதியின் முன்பு சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அத்துடன் மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேல் முறையீடு மேலும் ஊரடங்கு முடியும் வரை மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வரும். இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

இதுகுறித்து டாஸ்மாக் நிறுவனம் செய்துள்ள மனு தாக்கலில், ‘உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட விதிமுறைகளை அமல்படுத்தி மது விற்கப்பட்டது. ஒரு சில இடங்களில் விதிமீறல்களை அமல்படுத்தி ஒட்டுமொத்த டாஸ்மாக் கடைகளையும் மூடுவதற்கு உத்தரவிட்டது ஏற்புடையதல்ல’’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல மாநிலங்களில் ஊரடங்கின்போது மதுவிற்பனை நடக்கும் போது தமிழகத்தில் விற்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
 

click me!