அக்னிபாத் பெயரில் ராணுவத்துக்கு பதில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு ஆள் சேர்ப்பு.. பாஜகவை போட்டுத்தாக்கிய நாஞ்சில் சம்பத்!

By Asianet TamilFirst Published Jun 19, 2022, 10:25 PM IST
Highlights

மத்திய அரசு அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக கூறி ஆர்.எஸ்.எஸ். வேலைக்கு ஆள் எடுக்கிறது என்று நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுக சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்க நாஞ்சில் சம்பத் நாமக்கல்லுக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். “மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அக்னிபாத் என்ற பெயரில் ராணுவத்துகு ஆள் எடுப்பதாக கூறி ஆர்எஸ்எஸ்க்கு வேலைக்கு ஆள் எடுக்கிற வேலையை தொடங்கியுள்ளார். அக்னிபாத் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேரும் இளைஞர்கள் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுடைய நிலைமை கேள்விகுறியாகிவிடும். லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து பட்டம் பெற்று விட்டு ராணுவத்தில் சேரும் கனவில் மத்திய அரசு கல் எரிந்து விட்டது.

எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து விட்டதால் பிரச்சனைகளை திசை திருப்பவே மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. அதிமுகவில் ஒற்றை தலைமை இல்லை என்று வித்தாரம் பேசிக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. இன்று அடியாட்களான மாவட்ட செயலாளர்களை கூட்டத்தில் பேச வைத்து ஒற்றை தலைமை என்று பேசி அத்து மீறுகிறார். அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறையில் பல்லாயிரம் கோடியை ஏப்பம் விட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. இன்று அதிமுக கட்சியையே எம்ஜிஆருக்கு அறிமுகம் இல்லாத எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்ற நினைக்கிறார்.

அதிமுகவில் அதிகாரபூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்க எடப்பாடி பழனிசாமி ஆயத்தம் ஆகி வருகிறார். இதற்கு பின்னால் பாஜக இருக்கிறது. வலிமை வாய்ந்த அதிமுகவில் பாஜக ஊடுருவி, கட்சியில் உட்கார்ந்து கொள்ள பாஜகவின் நரி தந்திரத்திற்கு எடப்பாடி பழனிசாமி பலியாகி விட்டார். அதனால், அவருக்கு சாபவிமோசனமே கிடையாது. கட்சியின் சீனியர் செங்கோட்டையன்தான். அனைத்து தொண்டர்களுக்கும் அறிமுகமானவர் செங்கோட்டையனே. கட்சி உடைத்துவிடுமோ என்று செங்கோட்டையன் கவலைபடுகிறார். சரியோ, தவறோ ஒரு திராவிட இயக்கத்தை உடைக்கப் பார்கிறாா்கள்.” என்று நாஞ்சில் சம்பத் கூறினார்.

click me!