ரியல் 'Jaibhim' பார்வதி இப்போதும் ஒரு கூலி தொழிலாளி.. அவருக்கு உதவுங்க.. நடிகர் சூர்யாவுக்கு சிபிஎம் கடிதம்.!

By Asianet TamilFirst Published Nov 12, 2021, 9:21 PM IST
Highlights

ராஜாக்கண்ணுவைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்றுத் தரவும் முடிந்தது.

‘ஜெய் பீம்’ படம் திரையாக்கத்தின் மூலம் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பார்வதிக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நடிகர் சூர்யாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

‘ஜெய் பீம்’ படத்தில் வந்த ராஜக்கண்ணு கொலை தொடர்பாக நீதி பெற்று தருவதில், கடலூரில் சிபிஎம் மாவட்டச் செயலாளராக இருந்த இன்றைய மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் ஒருவர். ‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக அவர் ஏற்கெனவே பாராட்டுத் தெரிவித்திருந்த கே.பாலகிருஷ்ணன், நடிகர் சூர்யாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தங்களின் நடிப்பும், இதர கலைஞர்களின் நடிப்பும் மிகச்சிறப்பான முறையிலும் மக்களை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. மேலும் ஓர் உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய அதன் இயக்குநர் த.ச.ஞானவேலின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது. 'ஜெய் பீம்' திரைப்படத்தைத் தயாரித்த தங்கள் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திரைக்கலைஞரான தாங்கள் முக்கியமான பிரச்சினைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருவதற்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகமெங்கும் மனித உரிமைகள் மீறப்படும்போது அத்தகைய வன்கொடுமைகளில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கம்மாபுரம் சம்பவத்திலும் கட்சியின் தலையீடு அமைந்தது. இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட குறவர் சமூகத்தைச் சார்ந்த ராஜாக்கண்ணு மற்றும் அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடத்தியது.

கட்சியின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. ராஜாக்கண்ணுவைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்றுத் தரவும் முடிந்தது. இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'ஜெய் பீம்' படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதிப் பெருமையடைகிறோம். பொதுவாக ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாக வெளியாகும்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனாலும், அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப் படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பார்வதிக்கும் அவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.” என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

27 ஆண்டுகளுக்கு முன்பு கடலூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜ்கண்ணு என்பவர் திருட்டு வழக்கில் போலீஸரால் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதை வெளிக்கொண்டுவர உழைத்த அவருடைய மனைவி பார்வதி, நீதியை பெற்று தந்த முன்னாள் நீதிபதி வழக்கறிஞர் சந்துரு ஆகியோரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஜெய் பீம்’ பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

click me!