ராம் மோகன ராவ் பேட்டிக்கு பிறகு ரெய்டு நடவடிக்கை நிறுத்தப்பட்டது ஏன்? - மு.க.ஸ்டாலின் அதிரடி கேள்வி

First Published Dec 30, 2016, 5:54 PM IST
Highlights


கருப்பு  பண ஒழிப்பு , ஊழல் ஒழிப்பு என்றெல்லாம் ரெய்டு நடத்திய மத்திய அரசு ராம் மோகன் ராவ் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்த பின்னர் அடங்கி போனதேன். ரெய்டு நடவடிக்கை முடங்கி போனது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

முகநூலில் அவரது அறிக்கை; 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் படும் துயரங்களைக் கண்டு அண்டை மாநில அரசுகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், தமிழகத்தில் இருக்கும் அதிமுக அரசு மக்களின் சிரமங்களைப் போக்க முயலாமல், வங்கி வரிசைகளில் பசியும் பட்டினியுமாக பல நாட்கள் நின்றதை கண்டு கொள்ளாமல் இருந்ததை மக்கள் நிச்சயம் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

இந்த உயர் மதிப்புடைய பண நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். தமிழக

 நிர்வாகம் நடக்கும் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திற்குள் மத்திய துணை ராணுவத்தின் துணையுடன் ரெய்டு நடத்தப்பட்டது. அதற்கு முன்பு மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு செய்யப்பட்டது.

 சேலம் மற்றும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகள் எல்லாம் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மட்டுமா அல்லது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

இவை எல்லாம் ஊழல் நடவடிக்கை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஏன் திடீரென்று அடங்கி போய்விட்டன என்பது புரியாத புதிராக இருக்கிறது. இத்தனை நாள் பரபரப்பான செய்தியாக தமிழகத்தில் நடைபெற்ற ரெய்டுகள், தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன், யாரைக் காப்பாற்ற இந்தத் தயக்கம் என்பது எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது. 

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரால் மக்களைத் துன்புறுத்திய மத்திய அரசின் அலட்சியமான போக்குக்கு, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தரப்பில் நடந்த போராட்டங்கள் மற்றும் தொடர்ந்து நிலவும் எதிர்ப்புகளை சமாளிக்க இந்த ரெய்டுகள் நடந்ததா என்ற கேள்வியும் அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.

click me!