வன்னிய இளைஞர்களை வளைக்கும் ரஜினி! ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு குறிவைக்கும் மாஸ்டர் ஸ்கெட்ச்

By sathish kFirst Published Sep 9, 2018, 12:14 PM IST
Highlights

ரஜினி ரசிகர் மன்றத்தின் அன்றாட செயல்களை மட்டும் அல்ல ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமனம், மாற்றம் என அடுத்தடுத்து அதிரடியாக அரங்கேறும் செயல்களுக்கு பின்னால் இருப்பது டாக்டர். இளவரசன் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினி திரைப்படங்களில் தீவிரமாக நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அவரது ரசிகர் மன்ற தலைவராக நியமிக்கப்பட்டவர் சத்யநாராயணா. 1996 சட்டமன்ற தேர்தல் சமயத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தி.மு.க வெற்றிக்கான வியூகத்தை ரசிகர்களிடம் எடுத்துரைத்து தேர்தல் பணியாற்றியவர் இவர். ஆனால் அந்த சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகும் தனது அரசியல் தொடர்புகளை நிறுத்தாத காரணத்தினால் அவர் ரசிகர் மன்ற செயல்பாடுகளில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
   
ஒரு கட்டத்தில் ரஜினி தனது ரசிகர் மன்ற தலைவர் பதவியை தானே வைத்துக் கொண்டார். தற்போதும் கூட ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் ரஜினி தான். ஆனால் ரசிகர் மன்ற பணிகளை ரஜினியின் நண்பரான சுதாகர் கவனித்து வந்தார். கட்சி துவங்க உள்ளதாக ரஜினி அறிவித்த பிறகு சுதாகருக்கு ரசிகர் மன்ற பொறுப்பாளர் என்கிற பதவி கொடுக்கப்பட்டது. அவருடன் இணைந்து பணியாற்றி லைக்கா நிறுவனத்தின் துணைத்தலைவராக இருந்த ராஜூ மகாலிங்கத்தை மாநிலச் செயலாளராக ரஜினி நியமித்தார்.


   
ரசிகர் மன்றத்தின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் இவர்கள் இருவரும் தான் நேர்காணல் செய்து இறுதி செய்தனர். கிட்டத்தட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமனம் நிறைவடைந்த பிறகு ராஜூ மகாலிங்கம் மீது புகார்கள் வரிசைகட்டின. பண விவகாரத்தில் கூட கணக்கு காட்டுவதில் ராஜு மகாலிங்கம் கார்ப்பரேட் மைன்ட் செட்டில் இருந்தார். அது தனக்கு சரிவராது என்று கூறி ராஜூ மகாலிங்கத்தையும் ரஜினி ஓரம்கட்டினார்.
   
இதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டவர் டாக்டர்.இளவரசன். இவர் தி.மு.க முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர். அதாவது வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜாவின் மனைவியுடைய பெரியப்பா. அந்த வகையில் ஆரம்பம் காலம் தொட்டே அரசியலில் ஈடுபாடு உள்ளவராக இருந்தவர். இவர் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட  பிறகு ரசிகர் மன்றத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன.

இந்த மாற்றங்கள் ரஜினியை கவர அவருக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் என்கிற புதிய பொறுப்பையும் ரஜினி வழங்கினார். மேலும் நிர்வாகிகள் மாற்றம் மற்றும் நீக்கத்திற்கான பரிந்துரைகளை தற்போது வழங்கி வருபவர் இளவரசன் தான். கடந்த ஒரு மாதமாக நிர்வாகிகள் மாற்றம் நீக்கம் என்று அவ்வப்போது வரும் அறிக்கைகளில் கூட இளவரசன் கையெழுத்து தான் உள்ளது. குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகாரம் இளவரசனுக்கு கொடுக்கப்பட காரணம் அவரது செயல்பாடுகள் தான் என்கின்றனர்.


   
தினமும் காலை ஒன்பது மணிக்கு ராகவேந்திரா மண்டபத்திற்கு வந்துவிடும் இளவரசன் பணிகள் முடிவடைய எவ்வளவு நேரம் ஆனாலும் இருக்கிறார். மேலும் உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி பணிகளை இளவரசன் மேற்பார்வை செய்யும் விதம் ரஜினிக்கு அவர் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டும் இன்றி மகளிர் மன்ற மாநில பொறுப்பாளராக இருக்கும் காயத்ரியுடன் இவர் இணைந்து மாநிலம் முழுவதும் மன்றத்தில் பெண்களின் சேர்க்கையை அதிகமாக்கியுள்ளார்.
   
வட மாவட்டத்தை சேர்ந்த வன்னியரான இளவரசன் மன்றத்தின் உயர் பதவியில் இருப்பது சென்னை தொடங்கி கடலூர் வரை பல்வேறு மாவட்டங்களில் ரஜினிக்கு வன்னியர்களின் ஆதரவை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என ரஜினி இளவரசனுக்கு முக்கியத்துவம்க கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

click me!