காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். எனினும், பாதுகாப்பு கருதி, அவரது பயண விவரங்கள் வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். கூட்டத்திற்கு செல்வாரா, இல்லையா என்று நாடு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், எனக்கு அதைவிட முக்கிய வேலை இருக்கிறது என்று கூறி, இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார், ராகுல்காந்தி.
இமயமலையில் உள்ள கைலாஷ் மானசரோவர் புனித தலத்துக்கு 12 நாள் முதல், 15 நாட்கள் வரை ராகுல் காந்தி யாத்திரை மேற்கொள்ளவுள்ளதாக, காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜீவலா, டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.
சிவ பக்தரான ராகுல் காந்தி, இயற்கையாக பனி வடிவில் தோன்றும் சிவலிங்கத்தை தரிசிக்க விரும்பியதை அடுத்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், ராகுல் காந்தியின் பாதுகாப்பு கருதி, அவரது பயண திட்ட விவரங்கள், படுரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி, கர்நாடக மாநிலம் ஹூப்ளிக்கு ராகுல் சென்ற விமானம், தொழில் நுட்ப கோளாறு காரணமாக தடுமாறியது. விமானியின் சாமர்த்தியதால், உடனடியாக பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்ட்து. ராகுல் உள்ளிட்டோர், நூலிழையில் உயிர்தப்பினர்.
இதுகுறித்து அப்போது கூறிய ராகுல் காந்தி, விமானத்தில் கோளாறு ஏற்பட்ட போது அதிர்ச்சியில் உறைந்திருந்ததாகவும், புனித யாத்திரை செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்ததாக கூறியிருந்தார். இச்சூழலில், மானசரோவர் யாத்திரைக்கு ராகுல் சென்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.