பிரதமர் மோடிக்கு எதிராகப் பேசினால் பிடித்து சிறையில் தள்ளுவீர்களா?-கொந்தளித்துப் பேசிய ராகுல் காந்தி

By Selvanayagam PFirst Published Oct 4, 2019, 9:18 PM IST
Highlights

பிரதமர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாரேனும் பேசினால் உடனடியாக அவர்களை சிறையில் தள்ளுவீர்களா என்று காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

பசுக் குண்டர்கள் வன்முறை, கும்பலாகச் சேர்ந்து சிறுபான்மையினரைத் தாக்குதல் போன்றவற்றை தடுக்கக்கூறி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது முசாபர்பூர் நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதைக் கேள்விப்பட்ட ராகுல் காந்தி இந்தக் கருத்தை தெரிவித்தார்.

வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

''இந்த நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இந்த உலகிற்கே தெரியும். இது ரகசியம் ஒன்றும் அல்ல பிரதமர் மோடிக்கு எதிராகவோ அல்லது மத்திய அரசுக்கு எதிராகவோ யாராவது பேசினால் அவர்களைச் சிறையில் தள்ளுகிறார்கள் அல்லது தாக்கப்படுகிறார்கள். 

எதிராக எழுதும், பேசும் ஊடகங்கள் நசுக்கப்படுகின்றன. நாட்டில் நடப்பது என்னவென்று ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரிகிறது. இந்த நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறது.

இந்த தேசத்தில் 2 விதமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஒன்று இந்த தேசத்தை ஒரு மனிதர் ஒரு சித்தாந்தம் ஆள வேண்டும். மற்றவர்கள் வாய்மூடி இருக்கவேண்டும். மற்றொரு புறம், எதிராகப் பேசும் காங்கிரஸ் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் இதை எதிர்க்கின்றன. 

இந்த தேசத்தில் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட பார்வைகள், வேறுபட்ட மொழிகள், கலாச்சாரங்கள், கருத்துகளைத் தெரிவிப்பதில் வித்தியாசமான கோணங்கள் இருக்கின்றன. அந்தக் குரல்களை நசுக்கக்கூடாது. இதுதான் இந்த தேசத்தில் நடக்கும் போராட்டம்"எனத் தெரிவித்தார்

click me!