ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ராகுல் வருவாரா ? இல்ல ஓடிப்போவாரா ? ராஜீவ் சந்திரசேகர் எம்,பி. கிண்டல் !!

By Selvanayagam PFirst Published Dec 14, 2018, 11:36 PM IST
Highlights

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், சில மாதங்களுக்கு முன்பு இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய  ராகுல் காந்தி தற்போது விவாதத்துக்கு வருவாரா அல்லது ஓடிப்போவாரா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல்  போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு  நடைபெற்றதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.  மேலும்  ரஃபேல் பேரம் குறித்து உச்சநீதிமன்றத்தின்  கண்காணிப்புடன் கூடிய  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று.,  ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங்,  முன்னாள் மத்திய அமைச்சர்கள்  யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி  மற்றும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. இதையடுத்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பு அளித்தது. அதில் ரஃபேல்  போர் விமானங்களை மத்திய அரசு கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் எந்தவிதமான சந்தேகமும் நீதிமன்றத்துக்கு இல்லை என தெரிவித்துள்ளது.

ரஃ பேல்  போர் விமான கொள்முதல் விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்த எந்த முகாந்திரமும் இல்லை என்றும் , .  போர் விமானங்களின் விலையை ஒப்பிட்டுப் பார்த்து விசாரிப்பது நீதிமன்றத்தின் பணி அல்ல என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்கும், நீதிமன்றம் தலையிடுவதற்கும் எந்தவிதமான முறைகேடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ரஃபேல் போர்விமானங்கள் கொள்முதலில் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை என கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக  நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பாஜக தலைவர்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லி, நிர்மலா சீத்தாராமன், அமித் ஷா, அனில் அம்பானி உள்ளிட்டோர் வரவேற்பு  தெரிவித்துள்ளதுடன்  ராகுல் காந்தியையும் வசை பாடியுள்ளனர். ராகுல் ஒரு பொய்யர் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த தீர்ப்பு குறித்து பாஜக மாநிலங்கனவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் தனது டுவிட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும் பொய் சொல்லுவது, ஏமாற்றுவதைவிட மற்றவைகள் சிறந்தது – ஒவ்வொரு பொய்யும் ஒரு விஷம்… என்ற லியோ டால்ஸ்டாயின் உவமைகளை ராகுல் காந்தியின் கவனத்துக் கொண்டு செல்வதாக குறிப்பிட்டுள்ளார். ராகுல் காந்தியின் பொய்யை உச்சநீதிமன்றம் உடைத்தெறிந்துவிட்டதாகவும் அவர்  கூறியுள்ளார்.

 

இதையடுத்து அவரது மற்றொரு டுவிட்டர் பதிவில், பாஜக தலைவர் அமித்ஷா கூறியதைப் போல , ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில்  ராகுல் காந்தி விவாதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் சில மாதங்களுக்கு முன்பு இப்பிரச்சனையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாரா என கேள்வி எழுப்பிய  ராகுல் காந்தி தற்போது விவாதத்துக்கு வருவாரா அல்லது ஓடிப்போவாரா ? என கிண்டல் செய்துள்ளார்.

click me!