ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை... கதிகலங்கிய அதிமுக... கடைசி நேரத்தில் திடீர் ட்விஸ்ட்..!

By Thiraviaraj RMFirst Published Oct 4, 2019, 1:34 PM IST
Highlights

அதுவரை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக இன்பதுரையே நீடிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் தற்காலிகமாக அதிமுக எம்.எல்.ஏவின் பதவி தப்பியுள்ளது. 

ராதாபுரம் தொகுதி  மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட அக்டோபர் 23ம் தேதி வரை வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

மறுவாக்கு எண்ணிக்கை வாக்கெடுப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு, அதிமுக வேட்பாளர் இன்பதுரையிடம் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இன்பதுரை 69590 வாக்குகளும், அப்பாவு 69541 வாக்குகளும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
 
இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கையின்போது 203 தபால் வாக்குகளை எண்ணாமல் அதிகாரிகள் நிராகரித்ததாகவும், அந்த வாக்குகளை எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும், 19, 20 மற்றும் 21வது சுற்றில் எண்ணப்பட்ட வாக்குகளையும் மீண்டும் எண்ண உத்தரவிட்டது. 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், பதிவான தபால் வாக்குகளையும் அக்டோபர் 4 ஆம் தேதி உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரிடம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம், மறு வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைக்கக் கோரி இன்பதுரை தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தேர்தலில் பதிவான 1508 தபால் வாக்குகள் மற்றும் 19, 20 மற்றும் 21-வது சுற்றுகளில் எண்ணப்பட்ட 34 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகள் நெல்லையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதையடுத்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காலை 10.30 மணியளவில் இன்பதுரை எம்எல்ஏ, அப்பாவு ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்தனர். காலை 11.30 மணிக்கு மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன்பின்னர் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை தேர்தல் முடிவையே மாற்றக்கூடும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வாக்கு எண்ணிக்கையை வரும் அக்டோபர் மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதுவரை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவாக இன்பதுரையே நீடிப்பார் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் தற்காலிகமாக அதிமுக எம்.எல்.ஏவின் பதவி தப்பியுள்ளது. 

click me!