இரண்டு பூட்டு போட்டு பூட்டுங்க சார்... பதறும் திருமாவளவன்..!

By Thiraviaraj RMFirst Published Apr 7, 2021, 11:21 AM IST
Highlights

வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
 

வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மே 2 ஆம் தேதி வரை அவற்றைப் பாதுகாப்பதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனிக்கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரிசெய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்த தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதே நேரத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பாதுகாப்பை தலைமை தேர்தல் அதிகாரி உறுதி செய்ய வேண்டும்.

கோடை வெயில், கொரோனா பாதிப்பு ஆகியவற்றிற்கு இடையில் சுமார் 75 சதவீத வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள், அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் ,மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. அந்த எந்திரங்கள் இரண்டு பூட்டுக்கள் பூட்டப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எந்தவித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு சென்றுள்ளனர்.

அதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கி பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, வாக்கு பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாக கையாள்வதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்கள் இடைநீக்கம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.  இது ஏற்புடையது அல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும் மற்றும் எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதை தலைமை தேர்தல் அதிகாரி உதவி செய்ய வேண்டும்.

தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு அசாமில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாஜக வேட்பாளரின் காரிலேயே கொண்டு செல்லப்பட்டதும், அந்த காரை மடக்கி பிடித்த இதற்காக பொதுமக்கள் மீது வழக்குப் போடப்பட்டதையும் பார்த்தோம். அத்தகைய நிலை தமிழ்நாட்டில் ஏற்படக்கூடாது. அதற்கு இங்குள்ள அரசியல் கட்சிகள் விழிப்போடு இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியான முறையில் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 2ம் தேதி வரை அவற்றை பாதுகாப்பதிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தனி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!