வீட்டு வாசலில் கருணாநிதியின் படத்தை வைத்து புகழ் வணக்கம் செலுத்துங்கள்.. கட்சி தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!

By Asianet TamilFirst Published Aug 5, 2021, 9:24 PM IST
Highlights

ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தினை வைத்து -மாலையிட்டு- மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன் என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாகத் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “ஒவ்வொரு உடன்பிறப்பின் இதயமும் தகர்ந்தது போன்ற உணர்வுடன் கண்ணீர் பெருக்கெடுத்த நாள். எதையும் தாங்கும் இதயம் கொண்ட அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்ற வைர நெஞ்சம் கொண்ட தலைவர் கருணாநிதியை இயற்கை சதி செய்து நம்மிடமிருந்து பிரித்த, பறித்த நாள். உடலால் அவர் பிரிந்தாலும் உடன்பிறப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் என்றென்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். இயற்கையின் கரங்கள் கொய்து சென்ற நம் உயிர்நிகர் தலைவருக்கு இது மூன்றாம் ஆண்டு நினைவேந்தல். இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் எல்லா நாளிலும் அதன் ஒவ்வொரு நொடியிலும் அவர் நினைவின்றி நம் இயக்கமில்லை.
தமிழே மூச்சாக தமிழர் நலமே வாழ்வாகக் கொண்டு, 80 ஆண்டுகளைக் கடந்த பொதுவாழ்வு கண்டு, 94 வயது வரை நிறைவாழ்வு வாழ்ந்து, தமிழ்நாட்டை வளம் பெறச் செய்து, இந்திய அரசியல் வானில் ஒளிவீசும் உதயசூரியனாகத் திகழ்ந்த மகத்தான தலைவர் கருணாநிதி. நாம் மட்டும் அவரைப் போற்றவில்லை. நாடு போற்றுகிறது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடுச் சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்று, தலைவர் கருணாநிதியின் திருவுருவப் படத்தினைத் திறந்து வைத்து, அவரது பெருமைகளை எடுத்துரைத்ததைக் கண்டோம்.
அத்தகைய மகத்தான சிறப்புமிக்க தலைவரின் திருவுருவப்படத்தைச் சட்டமன்றத்தில் திறந்து வைப்பதற்கு, அவர் மறைந்து மூன்றாண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்திய அரசியல் தலைவர்களின் முன்மாதிரியான - ‘ரோல் மாடல்’ தலைவருக்கு, திமுக அரசு அமைந்த பிறகுதான் சட்டமன்ற மண்டபத்தில் திருவுருவப் படம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. 
உங்களின் துணையுடனும் தமிழ்நாட்டு மக்களின் பேராதரவுடனும் தலைவர் கலைஞர் வழியில் கழக அரசின் பயணம் தொடரும் என்பதை அவரது மூன்றாம் ஆண்டு புகழ்வணக்க நேரத்தில் உறுதிமொழிகிறேன். உடன்பிறப்புகளாகிய உங்களின் ஒத்துழைப்பே இந்தப் பயணத்திற்கு வலுசேர்க்கும். கருணாநிதிக்குப் புகழ் சேர்க்கும். கொரோனா கால நெறிமுறைகளைக் கருத்தில் கொண்டு அவற்றை முறையாகக் கடைப்பிடித்து ஆகஸ்ட் 7 அன்று அவரவர் இல்லத்தின் வாசலில் கருணாநிதியின் படத்தினை வைத்து -மாலையிட்டு- மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்திட வேண்டுகிறேன்.
பெருவிழாக்கள் வேண்டாம். அலங்காரங்கள்- ஒலி பெருக்கிகளைத் தவிர்த்திடுவீர். நம் நெஞ்சங்களிலும் நினைவுகளிலும் நிரந்தரமாக இருந்து, நாட்டை வழிநடத்தும் முத்தமிழறிஞருக்கு வீடுகள்தோறும் மரியாதை செலுத்திடுவோம். அவர் வகுத்த பாதையில் பயணித்து தமிழ்நாட்டை மாண்புறச் செய்திடுவோம்.” என்று கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

click me!