புரவி எதிரொலி..மக்களே இன்றைக்கும் நாளைக்கும் வெளியில் வருவதை தவிருங்கள்.. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை...

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 10:34 AM IST
Highlights

ராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் அதீத கன மழையும் புயலும் வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புரவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோள் விடுத்துள்ளார், இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 

இந்திய வானிலை ஆய்வு மையம் தென் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் இலங்கையில் கரையை கடக்க தொடங்கி தென் தமிழகத்தில் பாம்பன்-கன்னியாகுமரி இடையே கரையைக் கடக்கும் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் அதீத கன மழையும் புயலும் வீசக் கூடும் என்பதால் பொதுமக்கள் மிக மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும் பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம்  209 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, இம்மையங்களில் பொது மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான பால், உணவுப் பொருட்கள், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கடலோர கிராமப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், எளிதில் மழைநீர் தேங்க கூடிய தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த வீடுகளில் குடியிருப்போர், மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் வைத்துள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக மையங்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கும், முகக்கவசம், சனிடைசர் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் புயல் குறித்த எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை. பொதுமக்கள் அதிகாரப்பூர்வ மற்றும் நம்பத்தகுந்த ஊடகங்களில் வரும் செய்திகளை கேட்குமாறும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

click me!