
தூத்துக்குடி உப்பைச் சாப்பிட்டு விட்டு துரோகத்தை ஏற்படுத்தி, அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி படுகொலையில் ஈடுபட்டதாக இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மீது புதுச்சேரி மாணவ அமைப்பினர் குற்றம் சாட்டினர்.
தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் காரணமாக புதுவையில் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. மேலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. புதுவை மாணவ அமைப்பைச் சேர்ந்தவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை கண்டித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். புதுவை நெல்லித்தோப்பு சிக்னலில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு காரணமான, தமிழக முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரின் வேடமணிந்தை நபர்களை நடுரோட்டில் அடித்தும், உதைத்தும், செருப்பால் அடித்தும் போராட்டம் நடத்தினர். தூத்துக்குடி உப்பைச் சாப்பிட்டு விட்டு துரோகத்தை ஏற்படுத்தி, அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி படுகொலையில் ஈடுபட்டதாகவும் அப்போது அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், தூத்துக்குடி உப்பை சாப்பிட்டு விட்டு துரோகத்தை ஏற்படுத்தி, அப்பாவி பொது மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுக்கொலை செய்ததாக கூறி, புதுச்சேரி மாணவ கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்பட்டதாக மாணவ கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் கூறினார்.