எஸ்.பி.வேலுமணிக்கு பகிரங்க மிரட்டல்.. தூசி தட்டப்படும் பழைய வழக்குகள்.. கே.என்.நேருவுக்கு செக் வைக்க அதிரடி.!

By Selva KathirFirst Published Jun 9, 2020, 10:06 AM IST
Highlights

11 மாதங்களில் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என்று ஸ்டாலின் சொல்லி கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையால் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் எரிச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

11 மாதங்களில் சிறையில் அடைக்கப்படுவது உறுதி என்று ஸ்டாலின் சொல்லி கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கையால் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் எரிச்சலில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் சசிகலா உறவினர் ராவணனுக்குக் கால் கழுவி, சென்னையில் திருமதி சசிகலாவிற்குச் சலாம் போட்டு, அமைச்சர் பதவியை “காக்காய் பிடித்து” வாங்கிக் கொண்டு, இன்றைக்கு உள்ளாட்சித் துறையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, என்று நேற்று திமுக தலைமை நிலையச் செயலாளர் கே.என்.நேரு வெளியிட்ட அறிக்கை தான் தற்போதைய தமிழக அரசியலின் ஹாட் டாபிக். ஆனால் இந்த அறிக்கையை எந்த முன்னணி செய்தி தொலைக்காட்சியும் ஒளிபரப்பு செய்யவில்லை.

நாளிதழ்கள் கூட முக்கியமான விஷயங்களை எல்லாம் சென்சார் செய்துவிட்டுத்தான் வெளியிட்டுள்ளன. திமுக ஆதரவு இணையதளங்கள் மற்றும் சில அரசியல் இணையதளங்கள் மட்டுமே நேருவின் அறிக்கையை முழுமையாக வெளியிட்டுள்ளன. இதன் மூலமே தமிழகத்தில் எஸ்.பி.வேலுமணியின் செல்வாக்கை தெரிந்து கொள்ளலாம். ஒரு கட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் நேரடியாக ஊடக தலைமைகளை தொடர்பு கொண்டு பேசியும் கூட நேருவின் அறிக்கையை முக்கிய செய்தி தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப செய்யவில்லை.

ஆனால் அந்த அறிக்கையில் இருந்து வாசகங்கள் அதிமுகவினரை அதிரச் செய்தது. தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரை சிறையில் தள்ளப்போவதாக முன்னாள் அமைச்சர் ஒருவர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளதுடன், தனிப்பட்ட முறையிலும் அமைச்சரை கடுமையாக விமர்சித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது திமுகவின் தலைமை நிலையச் செயலாளர் எனும் உயர் பொறுப்பில் இருப்பவர் கே.என்.நேரு. தற்போது ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் நேரு மிக முக்கியமானவர்.

ஸ்டாலின் நம்பக்கூடிய வெகு சிலரில் நேருதான் முதன்மையானவர். பல மூத்த நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு நேருவுக்கு முதன்மைச் செயலாளர் பதவியை கொடுத்துள்ளார் ஸ்டாலின். இப்படி திமுகவில் மிக முக்கிய நிர்வாகியாக வலம் வரும் நேருவின் அறிக்கையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது தான் எஸ்.பி.வேலுமணி தரப்பின் தற்போதைய நிலைப்பாடு என்கிறார்கள். நேருவின் அறிக்கை தனிப்பட்ட முறையில் வேலுமணிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கிறார்கள்.

அதுவும் கடந்த கால அரசியல் வரலாற்றை நேரு கிளறியிருப்பத வேலுமணிக்கு தற்போது தர்மசங்கடமாக சூழலை உருவாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடு நேருவுக்கு எதிரான நடவடிக்கையாக வெடிக்கும் என்றும் சொல்கிறார்கள். உள்ளாட்சித்துறை தொடர்பாக அடிப்படை ஆதாரமின்றி செய்தி வெளியிட்டதாக பத்திரிகையாளர்களை கூட கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் கோவையில் நடைபெற்றது. சென்னையில் பத்திரிகையாளரை கைது செய்து விமானத்தில் அழைத்து வந்து கோவை சிறையில் அடைக்க வைத்ததாகவும் எஸ்.பி.வேலுமணியை பற்றி கூறுவார்கள்.

இதே போல் கோவையில் சிண்டிகேட் அமைத்து அமைச்சர், அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த பத்திரிகையாளர்களை குண்டர் சட்டத்திலும் அடைத்தவர் என்கிற பேச்சு உண்டு. அப்படி இருக்கையில் அரசியல்வாதியான கே.என்.நேருவை அமைச்சர் தரப்பு சும்மா விடாது என்கிறார்கள். மிகவும் அவதூறான வார்த்தைகளுடன் வெளியான அறிக்கைக்காக நேரு மீது அவதூறு வழக்கு போடப்படுவது உறுதி என்று கூறப்படுகிறது. அதே போல் கே.என்.நேருவின் கடந்த கால வழக்குகளை மறுபடியும் தூசி தட்ட முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கே.என்.நேரு அமைச்சராக இருந்த போது அவரது தம்பி ராமஜெயம் உள்ளிட்டோர் திருச்சியில் கட்டப்பஞ்சாயத்திற்கு பெயர் போனவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. மேலும் ஏராளமான நில அபகரிப்பு புகார்களும் அவர்கள் மீது உண்டு. இதை எல்லாம் தூசி தட்டி எடுத்து நேருவுக்கு குடைச்சல் கொடுக்க ஆளும் தரப்பு தயாராகிவிட்டதாகவும் பேச்சு அடிபடுகிறது.

click me!