பள்ளிகளை நோட்டமிடும் பொது சுகாதார துறை! டெங்குவைப் பரப்பினால் அங்கீகாரம் ரத்து! 

First Published Oct 22, 2017, 1:52 PM IST
Highlights
Public health department warns schools


தமிழகத்தில் டெங்கு பாதிப்பு வெகுவாக பரவி வருகிறது. தினமும் 10 முதல் 15 பேர் வரை டெங்கு பாதிப்பால் உயிரிழந்து வருகின்றனர். டெங்கு காய்ச்சலை முற்றிலும் ஒழிக்க, தமிழக அரசு முழு முனைப்புடன், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிந்து வருகின்றனர். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கொசு உற்பத்திக்கு வழி வகுக்கும் வீடுகளில், குடிநீர் இணைப்பு துண்டிக்கச் சொல்லி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், வீடு தோறும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

அது மட்டுமல்லாது கடைகள், காலி மனைகள், கட்டுமான பணியிடங்கள், சேமிப்பு கிடங்குகள், திரையரங்குகள், சுங்கச்சாவடிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

நேற்று சேலத்தில் நடைபெற்ற சோதனையின்போது, டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் வகையில் உள்ள வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், ரூ.56,000 ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி, டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் இருந்ததை அடுத்து அந்த பள்ளிக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

பொது சுகாதார துறை இயக்குநர் குழந்தை சாமி, சென்னை, நந்தம்பாக்கத்தில் இன்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் செயல்படும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

பள்ளிகளில் டெங்கு கொசு உற்பத்தியாகும் சூழ்நிலை இருந்தால், 104 என்ற தொலைபேசி எண்ணுக்கு பெற்றோர்கள் புகார் அளிக்கலாம் என்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தை தெரிவித்தார். 

click me!