தனியார் மயமாகிறது சேலம் உருக்காலை, எண்ணூர் துறைமுகம் !! மத்திய அரசு அதிரடி !!

By Selvanayagam PFirst Published Jun 25, 2019, 8:18 PM IST
Highlights

சேலம் உருக்காலை நிறுவனம்,  எண்ணூர் துறைமுகம் உள்பட 28 பொதுத்துறை நிறுவனகளை தனியார் மயமாக்க   மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை  மத்திய அமைச்சர் அரவிந்த் கன்பத் சாவந்த் வெளியிட்டுள்ளார்.
 

சேலம் உருக்காலை 1970 ல் துவங்கப்பட்ட பொதுத்துறை நிறுவனமாகும். இந்திய அரசின் மகா ரத்தினங்களுள் ஒன்று. இந்த நிறுவனம் செயில் (SAIL) நிறுவனத்தின் கீழ் இயங்குகிறது. இதன் முக்கிய உற்பத்தி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் (Stainless Steel) எனப்படும் துருபிடிக்காத எஃகு உற்பத்தி செய்வதாகும். நமது நாட்டின் நாணயம், பாத்திரங்களுக்கு தேவையான ஸ்டெயின்லஸ் ஸ்டீல் முதல், நமது ரயில் பெட்டிகள், செயற்கைகோள்கள், அணு உலைகள் ஆகியவற்றுக்கு தேவையான ஸ்டீல் வரை இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

ரூ.136 கோடி முதலீட்டில் 32,000 டன் உற்பத்தி திறனுடன் துவங்கப்பட்ட இந்த மகாரத்தினத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ஏறத்தாழ 8,000 கோடி ரூபாயாகும். உண்மையான இதன் மதிப்பு இந்த உத்தேச மதிப்பைவிட பல மடங்குகள் அதிகமாகும். 

இன்றைய இதன் உற்பத்தி திறன் 6 லட்சம் டன். ஸ்டெயின்லஸ் ஸ்டீல் உற்பத்தியில் சர்வதேச அளவில் 12 முன்னணி நிறுவனங்களில் சேலம்  உருக்காலையும் ஒன்றாக திகழ்கிறது. இந்த ஆலையில் 2,200 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். சுமார் 5,000 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.இந்த நிறுவனத்தை ஜிண்டால் நிறுவனத்துக்கு தாரை வார்க்க கடந்த ஆண்டே பாஜக அரசு முயற்சி செய்தது. இதற்காகவே 8 வழிச்சாலையை போட எடப்பாடி அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இதே போல் சென்னையை அடுத்த எண்ணூர் துறைமுகமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த இரண்டு நிறுவனங்கள் உட்பட 28 பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக  மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு எழுத்து பூர்வமாக  பதிலளித்த அமைச்சர் அரவிந்த் கன்பத் சாவந்த் ,  நலிவடைந்த மற்றும் நட்டத்தில் இயங்கி வரும் எச்எம்டி வாட்சஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடக்ட்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் 19 பொதுத்துறை நிறுவனங்களை மூட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

போட்டி நிறைந்த சந்தையை எதிர்க்கொள்ள முடியாதது மூலதனத்தை அதிகரிக்க வேண்டியது மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு மாறவேண்டியது போன்ற காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!