குடியரசு தலைவர் தேர்தல்.. வெற்றிக்கு பக்கத்தில் பாஜக.. பாஜக கூட்டணியை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

Published : Jun 11, 2022, 10:26 PM IST
குடியரசு தலைவர் தேர்தல்.. வெற்றிக்கு பக்கத்தில் பாஜக.. பாஜக கூட்டணியை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

சுருக்கம்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

நாட்டின் 16-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜுலை 18 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி நிறுத்திய வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார். காங்கிரஸ் நிறுத்திய மீராகுமார் தோல்வியடைந்தார். இந்த முறையும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்தத் தேர்தலில் நாடாளுமன்ற எம்.பி.க்கள், சட்டப்பேரவைகளின் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர். மக்களவை, மாநிலங்களவையில் 776 எம்.பி.க்கள் உள்ளனர். ஒவ்வொரு எம்.பி.யின் வாக்கு மதிப்பு 700 ஆகும். இதேபோல எல்லா மாநிலங்களிலும் சேர்த்து 4,033 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களுடைய வாக்கு மதிப்புகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும். இந்த இரண்டையும் சேர்த்து மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431 வாக்குகள் ஆகும். தற்போதைய  நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 440 எம்.பி.க்கள் இருக்கின்றனர். எதிர்கட்சிக்கு 180 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.  

இத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கு 5,35,000 வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மெஜாரிட்டி வாக்குகளைப் பெற பாஜகவுக்கு சுமார் 1 சதவீத வாக்குகள் குறைவாக உள்ள நிலையில், பிஜு ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் பாஜக கூட்டணி வேட்பாளர் சுலபமாக வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் கூட்டணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கருதப்படுகிறது. என்றாலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தும் நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

இதற்கான பணிகளை காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே களமிறங்கியுள்ளார். இவர் திமுக, திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தக் கூட்டணிக்கு இடதுசாரிகள் ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகளை அணி திரட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளுங்கட்சி வேட்பாளரை அறிவித்த பிறகே எதிர்க்கட்சிகள் வேட்பாளர் பெயரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!