குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க திட்டம்... மலிவான நாடகமாடுகிறாரா மோடி..?

By Thiraviaraj RMFirst Published Jan 7, 2022, 10:49 AM IST
Highlights

பிரதமர் வருகை தந்த நாளில் பாஜக பொதுக்கூட்ட இடங்கள் எல்லாம் கூட்டமில்லாமலும், காங்கிரஸ் பொதுக்கூட்ட அரங்கங்கள் அனைத்தும் நிரம்பி வலிந்தும் இருந்தன. 

பஞ்சாப் மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஜனநாயக ஆட்சியைக் கவிழ்க்கவே பிரதமர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என மலிவான நாடகமாடுகிறார் என விமர்சித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி.

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார். ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனால் காங்கிரஸ், பாஜக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி, நான் உயிருடன் இருக்கிறேன் உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள் என்று கூறிச் சென்றதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் சன்னி, உண்மையில் பிரதமரின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலுமே இல்லை. அவர் தனது பயணத்தை ரத்து செய்யக் காரணம் பெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்குத் தேவையான கூட்டம் கூடவில்லை என்பதே. மைதானத்தில் காலி நாற்காலிகள் இருப்பதாக வந்த தகவலால் அவர் திரும்பிச் சென்றார். போராட்டக்காரர்கள் ஒரு கிலோமீட்டருக்கும் அப்பால் இருந்தபோது எப்படி உயிருக்கு அச்சுறுத்தல் என்று அவர் கூற முடியும்.

பஞ்சாப் மக்கள் எப்போதும் தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாடும், இறையான்மைக்காக உயிரை நீத்தவர்கள். அவர்கள் எப்படி நாட்டின் பிரதமரின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பார்கள்.

பிரதமர் வருகை தந்த நாளில் பாஜக பொதுக்கூட்ட இடங்கள் எல்லாம் கூட்டமில்லாமலும், காங்கிரஸ் பொதுக்கூட்ட அரங்கங்கள் அனைத்தும் நிரம்பி வலிந்தும் இருந்தன. இதனால் பிரதமர் மோடி மலிவான நாடகமாடியுள்ளார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் திட்டம். பிரதமர் பஞ்சாப் மக்களை அவமானப்படுத்துவதை நிறுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக மாநிலத்தை அவமதிக்க வேண்டாம். பாஞ்சாப் மக்கள் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சமூக பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறார்கள்’’ என்று கூறினார்.

இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது பஞ்சாபில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து குடியரசுத் தலைவர் முழுமையாக கேட்டறிந்தார். பாதுகாப்பு குறைபாடு குறித்து அவர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கவலை தெரிவித்தார். இதுகுறித்து பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.

click me!