தென் சென்னையில் எனக்கே வெற்றி... சீரியஸாகப் பேசும் பவர் ஸ்டார் சீனிவாசன்..!

By Asianet TamilFirst Published Apr 2, 2019, 10:01 AM IST
Highlights

தென் சென்னையில் போட்டியிடும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்,  “தமிழகத்தில் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியும்” என்று சீரியஸாகச் சொல்லியிருக்கிறார். 
 

தென் சென்னை தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சி (அ) பிரிவு சார்பில் களமிறங்கியிருக்கிறார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். அவருக்கு அயர்ன் பாக்ஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தென் சென்னைக்கு உட்பட்ட தொகுதியில் தீவிரமாகப் பிரசாரம் செய்துவருகிறார். இந்நிலையில் தன்னுடைய வெற்றி வாய்ப்பு குறித்து பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி அளித்திருக்கிறார்.
“நடிகர் கமல் கட்சியில் நான் ஏன் சேரவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். கமல் கட்சி இப்போதுதான் தொடங்கப்பட்டது. நான் சேர்ந்துள்ள இந்திய குடியரசுக் கட்சி 40 ஆண்டுகளாக உள்ள கட்சி. அந்தக் கட்சியின் மாநில துணை தலைவராக இருக்கிறேன். தேர்தலில் தென் சென்னை தொகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்தத் தொகுதியில் களமிறங்கியிருந்தாலும் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், கட்சி தலைமை தென் சென்னை தொகுதியை ஒதுக்கியதால் விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.


தேர்தலில் ஓட்டு போட யாராவது என்னிடம் பணம் கேட்டால் இல்லை என்று சொல்லிவிடுவேன். ஓட்டுக்கு பணம் வாங்குவது தவறு என்று வாக்காளர்களிடம் எடுத்துரைப்பேன். என்னை வெற்றி பெற செய்தால், அதன்பிறகு தேவையான உதவிகளை செய்வேன் என்று வாக்காளர்களிடம் சொல்வேன். தென் சென்னையில் நான் முதல் வகுப்பில் பாஸ் ஆகிறேனா அல்லது ஜஸ்ட் பாஸ் ஆவேனா என்பது தேர்தலுக்கு பிறகு தெரிந்துவிடும். என்றாலும் தென் சென்னையில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்” என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

click me!