முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சொத்துவரி உயர்வு :
15-வது நிதி ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், நகர்ப்புறங்களில் 25 சதவீதம் முதல் 150 சதவிகிதம் வரை, சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக ஆர்ப்பாட்டம் :
இந்நிலையில், சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நேற்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், திருச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுக்க அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு :
இந்நிலையில், புதுக்கோட்டையில் சொத்துவரி உயர்வை கண்டித்து நேற்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.