
பிரதமராகும் கனவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் வெறும் வார்த்தை ஜாலம்தான். இது பகல் கனவு பட்ஜெட்டாகும். தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சம் கோடியை தாண்டிவிட்டது. தமிழக மக்கள் மீது கடுமையான கடன் சுமை சுமத்தப்பட்டிருக்கிறதுது. இந்திய மாநிலங்களிலேயே தமிழக அரசுதான் அதிகளவில் கடன் வாங்கியுள்ளது. ரூ.7000 கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாகக் காட்டுகிறார்கள். அது உண்மையாக இருந்தால், அடுத்த ஆண்டுகளில் தமிழக அரசு ரூ. 80,000 கோடி கடன் வாங்க வேண்டி வரும்.
ஆட்சிக்கு வரும் முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியவர்கள், இப்படியொரு பட்ஜெட்டை தாக்கல் செய்திருப்பது எப்படி நியாயமாகும்? தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1000 தருவதாக திமுக சொன்னது. அதை நிறைவேற்றவில்லை. அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதை வரவேற்கிறோம். ஆனால், 36 மாதங்களுக்கு 5 லட்சம் பேருக்கு மாதம் ரூ. 1000 கொடுக்க முடியுமா? தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு, அந்த நிதியை வேறு திட்டத்துக்கு மாற்றுவதை ஏற்க முடியாது.
பட்ஜெட்டில் தொலை நோக்கு பார்வையில்லை, தெளிவு, புரிதல் இல்லை. தமிழக அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகையை முழுமையாக கொடுத்து விட்டது. அதனால்தான் மாநில அரசுக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் நிலுவைத் தொகையை வழங்காமல் இருப்பதில்லை. மத்திய அரசு எந்த மாநிலத்துக்கும் பாரபட்சமும் காட்டுவதில்லை. எதெற்கெடுத்தாலும் தமிழக அரசு மத்திய அரசு மீது பழிபோட்டு வந்தது. ஆனால், பட்ஜெட்டில் மத்திய அரசு நிலுவை தொகையை வழங்கியதாக எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி புதிய திட்டமாக அறிவித்துள்ளனர். திட்டங்களுக்கு எந்தப் பெயர் சூட்டினாலும் பரவாயில்லை. தமிழக மக்கள் பயன் பெற்றாலே போதும். தமிழகத்தை கடன் சுமையிலிருந்து வெளியே கொண்டுவந்து வருவாயைப் பெருக்க புதிய வழிகளை ஏற்படுத்த வேண்டும். பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக தமிழக ஆளுனரிடம் மார்ச் 21-ல் புகார் அளிக்க உள்ளோம். பிஜிஆர் நிறுவனத்தில் சோதனை செய்ய வேண்டும். ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தமிழக அரசு வித்தியாசமான அரசு என நிரூபிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் அரசு என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
நாட்டில் பிரதமர், துணை பிரதமர் கனவில் பல தலைவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கனவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். எப்படியிருந்தாலும் 400 எம்பிக்களுடன் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்” என்று அண்ணாமலை தெரிவித்தார்.