
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்பு நடந்த விவகாரத்தில், டீனுக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உறுதிமொழி ஏற்பு விவகாரம்
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழியேற்பு செய்துக் கொண்டது சர்ச்சையாக வெடித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டது. மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலு உடனடியாக அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். மேலும் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதல்படி இதுதொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். கல்லூரி முதல்வருக்கு தெரியாமல் இப்பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது என்றும் ப. சிதம்பர்ம தெரிவித்துள்ளார்.
ப. சிதம்பரம் கண்டனம்
இதுதொடர்பாக ப. சிதம்பரம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து, அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் மிகுந்த வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் பேரவைத் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
கல்லூரி டீனுக்கு ஆதரவு
டீன் ரத்தினவேலு, கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக் கூடாது என்பதே என்னுடைய கவலை" என்று ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.