மாற்றுத்திறனாளிகளை கால் கடுக்க காக்க வைத்த உதயநிதி ஸ்டாலின்! புலம்பித் தீர்த்த தி.மு.க நிர்வாகிகள்!

First Published Jul 15, 2018, 3:23 PM IST
Highlights
physcally handicapped function udayanidhi stalin


சென்னையில் தி.மு.க சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த உதயநிதி ஸ்டாலினால் அங்கு வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் தவியாய் தவித்துப் போயினர்

  சென்னை அன்பகத்தில் தி.மு.க சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகளுக்காக போராடி வருபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவார் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

 சென்னை அன்பகத்தில் காலை 10 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என்று அழைப்புகளில் கூறப்பட்டிருந்தது. இதனால் நலத்திட்ட உதவிகளை பெற காலை ஒன்பது மணிக்கு எல்லாம் மாற்றுத்திறனாளிகள் அன்பகத்திற்கு வந்துவிட்டனர். செய்தியாளர்களும் காலை ஒன்பது மணியில் இருந்து செய்தி சேகரிக்க அன்பகத்தில் குவிந்தனர். ஆனால் காலை பத்து மணிக்கு உதயநிதி வரவில்லை. இப்போது வருவார், அப்போது வருவார் என்று தி.மு.க நிர்வாகிகள் மேடையில் அறிவிப்புகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தனர்.

 காலை பத்தரை மணியை கடந்த பிறகும் உதயநிதி வராத காரணத்தினால் சில மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சி அரங்கில் இருந்து வெளியேற தயாராகினர். அவர்களை தி.மு.க நிர்வாகிகள் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்து வந்தனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் அங்கிருந்து எழுந்து சென்றுவிடாமல் இருக்க டீ, காஃபி, நொறுக்குத் தீனிகள் வரவழைக்கப்பட்டன. காலை 11 மணி ஆன நிலையிலும் உதயநிதி நிகழ்ச்சிக்கு வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இதனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தி.மு.கவினரே சற்று கலங்கிப் போயினர்.

 மணி 11.30ஐ நெருங்கிய நிலையில் உதயநிதியின் கார் நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கிற்கு வந்து சேர்ந்தது. இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை என்பதை தெரிவிக்கும் வகையில் உதயநிதி ரொம்ப சோர்வாக காணப்பட்டார். பின்னர் மேடைக்கு வந்த அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கிவிட்டு, சிறிது நேரம் தொண்டர்கள் மத்தியில் பேசினார். தனது தந்தை முதலமைச்சரான பிறகு, மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அவர கூறிவிட்டு பேச்சை முடித்தார்.

 நிகழ்ச்சி முடிந்த பிறகு வீட்டுக்கு திரும்பிய போது செய்தியாளர்கள் உதயநிதியை சூழ்ந்து கொண்டனர். ஆனால் செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டு உதயநிதி அங்கிருந்து புறப்பட்டார். ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தது ஏன் என்று உதயநிதி தரப்பில் விசாரித்த போது, இரவில் படப்பிடிப்பு முடிந்து வர நேரம் ஆகிவிட்டது என்றும், இதனால் உதயநிதி தூங்கி எழ தாமதம் ஆகிவிட்டது என்றும் விளக்கம் அளித்தனர்.

click me!