குட் நியூஸ்.. தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!

By vinoth kumarFirst Published Jul 20, 2020, 12:12 PM IST
Highlights

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.


தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கி இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு இந்து அறநிலையத்துறை தடை விதித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், சித்திரைத் திருவிழா உள்ளிட்ட அனைத்து விதமான திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசு வழங்கிய தளர்வுகளை அடுத்து கடந்த 1-ம் தேதி முதல் கிராமங்களில் மட்டும் சிறிய கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்;- தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில் உள்ள பட்டியல் சார்ந்த மற்றும் பட்டியல் சாராத கோயில்களில் பூஜைகள், திருவிழாக்கள் நடப்பது இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கொரோனா பரவலால் பொதுமக்கள் நலன் கருதி கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தினசரி பூஜைகள் மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் தங்கு தடையின்றி நடந்து வருகிறது.

தற்போது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோயில்களில் நடக்க வேண்டிய திருவிழாக்களுக்கு அனுமதி கோரியும் திருவிழா நிகழ்வுகளை யூ-டியூப் சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டியும் சார்நிலை அலுவலர்களிடம் இருந்து முன் மொழிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

கோயில்களில் வழக்கமாக நடக்கும் திருவிழாக்களுக்கு தலைமையிட அனுமதி பெற வேண்டியதில்லை. திருவிழாக்கள் தொன்று தொட்டு கடை பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி கோயில் வளாகத்துக்குள் நடக்க வேண்டும். சொற்ப அளவிலான கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக்கவசம் அணிந்து, 6 அடி சமூக இடை வெளி கடைபிடித்து திரு விழாக்கள் நடக்க வேண்டும். விழாக்களில் உபயதாரர் கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டியிருப்பின் அந்த அனுமதியை பெற்று திரு விழாக்கள் நடத்தப்பட வேண்டும்.  விழாக்களை பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து காணும் வகையில் வலைதள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!