பெகாசஸ் உளவு விவகாரம்... அமித் ஷா பதவி விலகணும்... உக்கிரம் காட்டும் காங்கிரஸ்..!

By Asianet TamilFirst Published Jul 20, 2021, 9:51 PM IST
Highlights

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலககோரி வரும் 22-ம் தேதி பேரணி நடைபெறவுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் இந்திய பாதுகாப்புப் படை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்ட சட்ட விரோதச் செயல், பாஜக அரசு மீதான சந்தேகத்தையும் மோசமான நடவடிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களின் செல்போன்களும் ஹேக் செய்யப்பட்டு வேவு பார்க்கப்பட்டுள்ளன. 
2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது பெகாஸஸ் ஸ்பைவேர் மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனத்தின் இந்த மென்பொருள், பல நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் செல்போன்களை ஹேக் செய்து வேவு பார்க்க மத்திய அரசும், அதன் ஏஜென்ஸிகளும் ஸ்பைவேரை வாங்கியது தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் நீதி விசாரணை நடத்தக் கோரியும், உள்துறை அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷா விலகக் கோரியும், நாடு முழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. இதன்படி, தமிழகத்தில் வரும் ஜூலை 22ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் மாளிகை வரை நடைபெறவுள்ள மாபெரும் பேரணியில், கட்சியின் மூத்த தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்" என்று அறிக்கையில் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

click me!