பரம்பிக்குளம் அணையின் மதகு உடைந்தது..! திமுகவின் அலட்சியப் போக்கே காரணம்- ஓபிஎஸ் குற்றச்சாட்டு

By Ajmal KhanFirst Published Sep 22, 2022, 11:30 AM IST
Highlights

பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

பரம்பிக்குளம் மதகில் உடைப்பு

பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேற்கு தொடர்ச்சி மலையில் ஓடும் பரம்பிக்குளம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பரம்பிக்குளம் அணையின் செயல்பாடுகளையும், பராமரிப்பையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து 20,000 கன அடி தண்ணீர் வீணாக கடலில் கலந்து கொண்டிருப்பதாகவும், அணையின் முழுக் கொள்ளளவும் வீணாகின்ற சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும் வந்துள்ள செய்தி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் காரணம் தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கே என விவசாயிகள் கூறுகின்றனர். பரம்பிக்குளம் அணையிலிருந்து கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயம் மேற்கொள்வதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். 

ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்

விவசாயம் பாதிப்பு

ஒவ்வொரு முறையும் நான்கு மாத காலத்திற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், இதன்மூலம் நான்கு இலட்சம் ஏக்கரில் பயிரிடப்படும் வேர்க்கடலை மற்றும் பயறு வகைகள் பாசனம் பெறும் என்றும், இந்த நீர் தென்னை விவசாயத்திற்கும் பயன்படும் என்றும், இது தவிர, நிலத்தடி நீர் கணிசமாக உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், தற்போது பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகுகளில் ஒன்று உடைந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறி கடலில் கலப்பதன் காரணமாக, இந்த ஆண்டு கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாயத்திற்கு தண்ணீர் வராது என்றும், தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் இந்த ஆண்டு இனிமேல் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வர வாய்ப்பில்லை என்றும், எனவே, இரண்டாவது முறையாக டிசம்பர் மாதம் முதல் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விவசாயத்திற்காக திறந்துவிட வேண்டிய தண்ணீர் வராது என்றும், தென்னை விவசாயம் பாதிக்கப்படும் என்றும், நிலத்தடி நீர் குறையக்கூடும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

சிறையை கண்டு அஞ்சமாட்டோம்..! ஆ.ராசாவிற்கு எதிராக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு தேதி குறித்த அண்ணாமலை

மதகு உடைப்பு சீர் செய்ய காலதாமதம்

பொதுவாக, மழை இல்லாத காலத்தில் அணைப் பராமரிப்புப் பணிகளை தமிழ்நாடு பொதுப் பணித் துறை மேற்கொள்ள வேண்டும். இதை தி.மு.க. அரசு சரிவர செய்யாததன் காரணமாக பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு ஒன்று தற்போது உடைந்துள்ளது. இனிமேல், அணையின் கொள்ளளவு முழுவதும் வெளியேறிய பிறகுதான் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை சீர் செய்ய முடியும் என்றும், இந்தப் பணியினை செய்து முடிக்க ஒரு மாதம் ஆகும் என்றும் விவசாமிகளும், வல்லுநர்களும் தெரிவிப்பதாக செய்தி வந்துள்ளது. இந்த உடைப்பின் காரணமாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

திமுகவின் அலட்சியமே காரணம்

பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகு உடைந்துள்ளதற்கு தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கே காரணம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த அலட்சியப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, பரம்பிக்குளம் அணையின் பிரதான மதகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சரிசெய்யவும், இந்த ஆண்டு விவசாயத்தை அப்பகுதி மக்கள் மேற்கொள்ள வழிவகை செய்யவும், இனி வருங்காலங்களிலாவது பருவமழைக்கு முன்பே அணையின் பராமரிப்புப் பணிகளை செவ்வனே மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஓ.பன்னீர் செல்வம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஸ்டாலின் குறித்து சர்ச்சை போஸ்டர்...! அண்ணாமலையின் உதவியாளரை அதிரடியாக கைது செய்த போலீஸ்


 

click me!