இது அறமா? அல்லது அது அறமா? மத்திய அரசை சரமாரியாக கேள்வி கேட்கும் ப.சிதம்பரம்..!

First Published Nov 8, 2017, 4:54 PM IST
Highlights
p chidambaram raised question against central government on demonetisation


பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்திய பாஜக அரசு கொண்டாடும் இன்றைய தினத்தில், கோடிக்கணக்கானோர் இன்னலுற்றது அறமான செயல்தானா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கறுப்பு தினமாக அனுசரித்துவரும் நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் பலருக்கு வேலை பறிபோனதையும் மறுக்க முடியாது என்று ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, அற ரீதியிலான நடவடிக்கை, பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக எடுத்துவைக்கப்பட்ட முதல் அடி, என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்ததை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு அறரீதியான நடவடிக்கை என்கிறார் நிதியமைச்சர் ஜேட்லி. பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை நோக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

கோடிக்கணக்கானோர் மீது துன்பத்தை ஏற்றுவதுதான் அறச்செயலா? குறிப்பாக 15 கோடி தினக்கூலி தொழிலாளிகள் பாதிக்கப்பட்டது அறச்செயலா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், 2017-ல் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் 15 லட்சம் வேலைவாய்ப்புகளை அழித்ததும், சிறு மற்றும் குறுந்தொழில்கள் ஆயிரக்கணக்கில் மூடப்பட்டதும் அறமா?

கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற எளிதான வழி ஏற்படுத்திக் கொடுத்ததுதான் அறமா?

சூரத், பிவாண்டி, மொராதாபாத், ஆக்ரா, லூதியானா மற்றும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களை சேதப்படுத்தியது அறச்செயலா? 

பணசுழற்சியை செயற்கையாக குறைத்தது பொருளாதார வளர்ச்சியின்மைக்கும், தேவை குறைவானதற்கும் ஒரு காரணமாகும்.

“வெளிப்படைத்தன்மை நலன்களுக்காக ஆர்பிஐ வாரிய திட்டம், பின்னணி குறிப்பு, முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பு ஆகியவற்றை அரசும் ரிசர்வ் வங்கியும் வெளியிடுவது அவசியம். அரசு தன்னுடைய முடிவில் நம்பிக்கை கொண்டிருக்குமேயானால், இந்த ஆவணங்களை வெளியிட ஏன் தயக்கம்?

மோடியின் இந்த நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தை சேதமாக்கியுள்ளது என்று பிபிசி கூறுகிறது, பிபிசி என்ன ஊழல் மற்றும் கருப்புப் பண ஆதரவாளரா?

இவ்வாறு தொடர் டுவீட்களின் மூலம் ப.சிதம்பரம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 

click me!