திருவனந்தபுரத்தில் சாலை விதிகளை மீறி அதி வேகமாக சென்ற கவர்னர் சதாசிவத்தின் காருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதையடுத்து அபராதம் கட்டப்பட்டது.
திருவனந்தபுரத்தில் கவடியார்- வெள்ளையம்பலம் இடையேயான சாலையில் எப்போதுமே கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து பொண்டே இருக்கும்..வாகன நெருக்கடி காரணமாக அடிக்கடி இந்த சாலையில் விபத்துக்கள் நடப்பது வழக்கம். எனவே போக்குவரத்து போலீசார் இச்சாலையில் வாகனங்கள் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர்.
ஆனாலும் சிலர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் செல்வதால் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதையடுத்து இச்சாலையில் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் வேகத்தை கண்டு பிடிக்கும் தானியங்கி கண்காணிப்பு கருவியை பொருத்தினர். கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி இந்த கருவி செயல்பாட்டுக்கு வந்தது.
அதன்பிறகு இச்சாலையில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லும் அனைத்து வாகனங்களும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந்தேதி இந்த சாலையில் சென்ற கவர்னரின் காரும் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகத்தில் சென்றது கண்டறியப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் கவர்னர் அலுவலகத்துக்கு இத்தகவலை தெரிவித்து அபராதம் கட்டுவதற்கான செல்லானையும் அனுப்பி வைத்தனர்.
கடந்த வாரம் தான் இந்த தகவல் கவர்னர் சதாசிவத்தின் கவனத்திற்கு சென்றது. அந்த காரை கவர்னர் பயன்படுத்துவதில்லை. அது கவர்னரின் செயலாளர் பயன்படுத்தும் கார். இருந்தும் போக்குவரத்து விதியை மீறி இருப்பதால் அபராதத்தை உடனடியாக செலுத்தும்படி அலுவலக ஊழியர்களுக்கு கவர்னர் சதாசிவம் உத்தரவிட்டார். அதன்படி அபராதமும் செலுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே சாலையில் வேகமாகச் சென்ற ஐகோர்ட்டு நீதிபதிக்கும் இது போல அபராதம் விதிக்கப்பட்டது. அவரும் அபராதம் செலுத்தினார்.
கவடியார்- வெள்ளையம்பலம் சாலையில் தானியங்கி கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்ட பின்பு தினமும் 3 ஆயிரம் வாகனங்கள் போக்குவரத்து விதியை மீறி செல்வது தெரிய வந்துள்ளது. இதனை கட்டுப்பாட்டு அறை ஊழியர்கள் கண்டு பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
இதுவரை அபராத தொகையாக ரூ. 1 கோடியே 10 லட்சம் வரை வசூலாகி இருப்பதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.