
துணை முதலமைச்சர் ஓபிஎஸ், கடந்த ஆண்டு டி.டி.வி.தினகரனை சந்தித்த விஷயம் அம்பலமானதால் அவர் தரப்புக்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதை தங்களுக்கு தங்களுக்கு சாதகமாக பன்படுத்திக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, தனியாக சென்று பிரதமரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓபிஎஸ்சை அதிமுகவில் இருந்து ஓரம் கட்டும் வேலைகள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பின், முதலமைச்சராக ஓபிஎஸ் பொறுப்போற்றுக் கொண்ட பின்னர் அவரை சசிகலா வலுக்கட்டாயமாக பதவியில் இருந்து இறக்கிவிட்டு தான் முதலமைச்சராக முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். அதே நேரத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சசிகலா ஆதரவில் இபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார்.
ஆனால் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் சசிகலா குடும்பத்தை ஓரம் கட்டிவிட்டு ஆட்சியைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் ஓபிஎஸ் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என அவரது ஆதரவாளர்கள் கடுப்பில் இருந்தனர். அதே நேரத்தில் கடந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியாமல் ஓபிஎஸ் தினகரனை சந்தித்துள்ளார்.
இது ஓபிஎஸ் ஆதரவாளர்களிமே கூட அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் அவர்களுக்கும் தெரியாமல்தான் ஓபிஎஸ் தினகரனை சந்தித்துள்ளார்.இதை, பழனிசாமி தரப்பினர், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர்.
இந்நிலையில், டெல்லி சென்ற முதலமைச்சர் தனியாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார். அரசு விவகாரத்துடன், அரசியல் விவகாரமும் பேசப்பட்டுள்ளது. தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இது, பழனிசாமி ஆதரவாளர்களிடம் உற்சாகத்தையும், பன்னீர் ஆதரவாளர்களிடம் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசு விவகாரம் தொடர்பாக, பிரதமரை முதல்வர் சந்திப்பதில் தவறில்லை. ஆனால், கட்சி கூட்டணி குறித்து பேசுவதாக இருந்தால், கட்சி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், பன்னீர்செல்வத்தை அழைத்து சென்றிருக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொதித்துப் போயுள்ளனர்.
ஆனால் பிரதமரிடம் இருந்து வந்த கிரீன் சிக்னலையடுத்து எடப்பாடி தரப்பு ஓபிஎஸ்சை ஓரம்கட்டத் தொடங்கியுள்ளனர். விரைவில் அவர் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்படுவார் அல்லது அவரே வெளியறிவிடுவார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.