விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ.75,000 வழங்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Nov 19, 2021, 1:20 PM IST
Highlights

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக ரூ.75,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக ரூ.75,000 இழப்பீடு வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு நிலைப்பாடு என்பதை ஒவ்வொரு பிரச்சனையிலும் எடுத்து வரும் தி.மு.க அரசு, தற்போது பயிருக்கான நிவாரணம் வழங்குவதிலும் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகவும் இரட்டை வேடம் போடுவதில் கைதேர்ந்த கட்சி தி.மு.க. என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையடுத்து, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ததன் காரணமாக பெருத்த பயிர்ச் சேதம் ஏற்பட்ட நிலையில், இது குறித்து ஆராய கூட்டுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டு, அந்தக் குழு ஆய்வு செய்து முதலமைச்சரிடம் ஆய்வறிக்கையினை அளித்தது. இதன் அடிப்படையில் , முழுமையாக சேதமடைந்த இனங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு 20,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பகுதிகளை மறு சாகுபடி செய்திட ஏதுவாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஆறாயிரத்து முப்பத்தெட்டு ரூபாய் மதிப்பீட்டில் இடுபொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்து இருக்கிறார்.

இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது, பாதிப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் வழங்கி அப்போதைய அரசு 2021 ஜனவரி மாதம் அறிவித்தபோது, அதனை விமர்சனம் செய்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர், பாதிக்கப்பட்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அறிக்கை விடுத்து, அந்தச் செய்தி 17-01-2021 நாளிட்ட நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. ஆனால், அண்மையில் பெய்த மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது , ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், ஆட்சிக்கு வருவதற்காக பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, ஆட்சிக்கு வந்த பிறகு, ஏக்கருக்கு 8,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் என்று அறிவித்து இருப்பது சற்றும் பொருத்தமற்ற ஒன்று என்று விமர்சித்துளார்.

இந்தச் செயல் விவசாய பெருங்குடி மக்களை வஞ்சிக்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தற்போது நீரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த ஆண்டு துவக்கத்தில் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் இழப்பீடு தரப்பட வேண்டும் என்பதே விவசாயப் பெருங்குடி மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் முதலமைச்சரின் நிவாரணம் குறித்த அறிக்கை, அவசர கோலத்தில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் வண்ணம், நீரால் சூழ்ந்துள்ள அனைத்துப் பயிர்களுக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய், அதாவது ஹெக்டேருக்கு 75,000 ரூபாய் வழங்கிட நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக தனது அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

click me!