சென்னையின் குடிநீர் பஞ்சம் - ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த செல்கிறார் ஓபிஎஸ்

First Published Jan 11, 2017, 5:19 PM IST
Highlights


வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. சென்னைய , திருவள்ளூர் , காஞ்சியில் குடிநீர் பிரச்சனை தலை தூக்கி உள்ளதால் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி நமக்கான கிருஷ்ணா நதிநீரை பெற முதல்வர் ஓபிஎஸ் ஆந்திரா செல்கிறார்.

வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் தமிழகம் முழுதும் வறட்சி ஏற்ப்பட்டுள்ளது. சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களில் குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு போனது.

குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி.  ஆனால் இன்றைய நிலவரப்படி 609 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது.  புழல் ஏரியின் கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. 

அதில் 432 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. சோழவரம் ஏரியில் 82 மில்லியன்  கன அடி தண்ணீர் இருக்கிறது. இதன் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி.

3645 மில்லியன் கன அடி கொள்ளளவு  கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 523 மில்லியன் கன அடி தண்ணீரே  இருக்கிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி, ஆனால் இப்போது, 1,646 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. 

ஏரிகளின் இந்த தண்ணீர் சென்னை நகருக்கு ஒரு மாதம் குடிநீர் சப்ளை  செய்வதற்கு  மட்டுமே போதுமானதாகும்.
சென்னை  நகருக்கு தினமும்  1,100 மில்லியன் லிட்டர்  முதல்  1200 மில்லியன்  லிட்டர் வரை குடிநீர் சப்ளை செய்யப்பட வேண்டும்.  தற்போது குடிநீர், குழாய் மூலம் 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை  செய்யப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் ஒன்றே தற்போதைய தீர்வு.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் தொடர்ந்து வரும்  என்று எதிர்பார்க்கப்பட்டது. சில தினங்கள் வந்த தண்ணீர் தற்போது   நிறுத்தப்பட்டு விட்டது. வீராணம் ஏரியிலும் நீர்மட்டம் குறைந்த அளவே  உள்ளது.

சென்னைக்கு , ஆந்திர மாநிலத்திலிருந்து 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரைப் பெற ஏற்கனவே ஓபிஎஸ் கடிதம் எழுதிய அடிப்படையில் ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணா நீரை திறந்து விட்டது. 

தற்போது இது பற்றி பேச நேரில் வருமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பின் பேரில் முதல்வர் சந்திரபாபுவுடன் பேச்சு வார்த்தை நடத்த முதல்வர் ஓபிஎஸ் , பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நாளை மதியம் செல்கின்றனர்.
பேச்சுவார்த்தை மூலம் சென்னைக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் என தெரிகிறது.

click me!