கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன், தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்த பேச்சுவார்த்தைக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ். உடன் தமிழக தலைமைச்செயலர் கிரிஜா வைத்தியநாதன், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், குடிநீர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
கிருஷ்ணா நீர் ஒப்பந்தப்படி, சென்னை குடிநீருக்காக ஆண்டுதோறும் 12 டி.எம்.சி.தண்ணீரை இரண்டு கட்டங்களாக ஆந்திரா திறந்துவிட வேண்டும். பெரும்பாலும் ஒப்பந்தப்படி தண்ணீர் வழங்காததால், சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஆந்திர மாநில விவசாயிகள் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் எடுப்பதால் பெரும்பாலும் மிகக் குறைந்த அளவே வந்து சேருகிறது.
இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால், ஏரிகள் வறண்டு கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது. சந்திரபாபு நாயடுவுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அண்மையில் கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடும் வறட்சியால் தமிழகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் வடபகுதிகளில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதிநீரைப் பெறுவது தொடர்பாக சந்திரபாபு நாயுடுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.