எடப்பாடி அரசை எதிர்த்து வாக்களித்த விவகாரம்... ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் சபாநாயகர் இன்று விசாரணை.!

By Asianet TamilFirst Published Aug 27, 2020, 8:25 AM IST
Highlights

கடந்த 2017-ம் ஆண்டில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களிடம் அதுதொடர்பாக சபாநாயகர் ப.தனபால் இன்று விசாரணை நடத்த உள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டில் சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர். இதன்பிறகு அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செவம் அணிகள் ஒன்றாக இணைந்தன. சட்டப்பேரவையில் எதிர்த்து வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகர் ப.தனபால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இதேபோல தினகரன் தரப்பும் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கில் சபாநாயகரே முடிவு எடுத்து ஒரு மாதத்தில் அறிவிக்கும்படி கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டார். ஒரு மாதம் கடந்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து பதிலளிக்கும்படி சபாநாயகருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்த விவகாரத்தில் ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று சபாநாயகருக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் தந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் என்ன முடிவு மேற்கொள்ளப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்துக்கு பதில் அளிக்க வேண்டிய நிலை உள்ளதால், தற்போது 11 எம்.எல்.ஏ.க்களிடம் விசாரணை நடத்த சபாநாயகர் ப. தனபால் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று 11 எம்.எல்.ஏ.க்களிடமும் காணொலி காட்சி மூலம் விசாரிக்க உள்ளார். அதன் அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முடிவெடுத்து சபாநாயகர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!