டிக்-டாக் மட்டும் போதாது இந்த ஆப்களுக்கும் ஆப்பு வைங்க.. மத்திய அரசுக்கு அதிரடி கோரிக்கை வைத்த தமிமுன் அன்சாரி

By vinoth kumarFirst Published Jul 1, 2020, 1:46 PM IST
Highlights

டிக் டாக் செயலி சட்டம் - ஒழுங்கையும், சமூக அமைப்பையும் பாதிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கடந்தாண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அது நாடு முழுக்க எதிரொலித்தது. தற்போது இது போன்ற மேலும் பல செயலிகள் நமது நாட்டின் பொது சமூகத்திற்கும், வளரும் தலைமுறையின் நலன்களுக்கும்  கேடு விளைவிக்கின்றன.

டிக் டாக் செயலியை போல மேலும் பல செயலிகள் நமது நாட்டின் பொது சமூகத்திற்கும், வளரும் தலைமுறையின் நலன்களுக்கும்  கேடு விளைப்பதால் அவற்றையும் தடை செய்ய வேண்டும் என நாகை எம்.எல்.ஏ.வும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவின் நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக கூறி, டிக் - டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதை வரவேற்கிறோம்.

டிக் டாக் செயலி சட்டம் - ஒழுங்கையும், சமூக அமைப்பையும் பாதிப்பதால் அதை தடை செய்ய வேண்டும் என மஜக சார்பில் கடந்தாண்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன். அது நாடு முழுக்க எதிரொலித்தது. தற்போது இது போன்ற மேலும் பல செயலிகள் நமது நாட்டின் பொது சமூகத்திற்கும், வளரும் தலைமுறையின் நலன்களுக்கும்  கேடு விளைவிக்கின்றன.

ஆரோக்கியம் பேணும் வகையில் ஒடி, விளையாடி வளர வேண்டிய பிள்ளைகள் கழுத்து வலிக்க, கண் சிவக்க ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வருகின்றனர். அவர்கள் ஆரோக்கியத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் இழந்து நோயாளிகளாக மாறுவது நமது சமூக அமைப்பிற்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். இது போன்ற செயலிகள்  உளவியல் ஊனமுற்றவர்களாக நம் சமூகத்தை மாற்றிடும் ஆபத்தை உருவாக்குகின்றன என்பதை பொறுப்புணர்வுடன் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

எனவே நம் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி பப்ஜி, ஆன்லைன் ரம்மி போன்ற  செயலிகளையும் மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

click me!