ஸ்டாலின் கையில் அடுத்த எக்ஸ்க்ளூசீவ் சி.டி: மிரண்டு, பதுங்கும் பெண் எம்.எல்.ஏ...

First Published Jun 21, 2017, 11:08 AM IST
Highlights
one more CD proof given by DMK Active leader M.K.Stalin


ஸ்டாலினின் இந்த மாத ராசிபலனில் “ஆதார சி.டி.யோட் அலைவீராக” என்று போட்டிருக்கிறதோ என்னவோ மனிதர் பல பஞ்சாயத்துக்கள் குறித்த எக்ஸ்க்ளூசீவ் சி.டி.களோடு அங்குமுமிங்குமாக பறப்பதையே முக்கிய வேலையாக கடந்த சில நாட்களாக வைத்திருக்கிறார். 

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க தங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கும், கூட்டணி அமைப்புகளின் எம்.எல்.ஏ.க்களுக்கும் கோடி கோடியாய் பண பேரம் நடத்தப்பட்டது எனும் உண்மையை கக்கும் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ சி.டி.யை ஹெச்.டி. தரத்தில் நாலஞ்சு பிரிண்டு போட்டு சட்டசபைக்கு எடுத்து வருகிறார் ஸ்டாலின். சபைக்கு உள்ளே போகும்போதும், அரைமணி நேரத்தில் வெளிநடப்பு செய்யும் போதும் இதைகாண்பித்தே ஆளாளுக்கு பிரஷர் ஏற்றுகிறார். இருந்தாலும் கூட ஸ்டாலினின் இந்த சி.டி. மந்திரம் தமிழக அரசை உலுக்க ஆரம்பித்திருப்பது தனி கதை. 

இது ஒருபுறம் இருக்கட்டும்!

இந்நிலையில் இப்போது ஸ்டாலினின் கையில் இன்னொரு சி.டி.யும் சிக்கியுள்ளது. ஆடியோ வாய்ஸ் அடங்கிய இந்த ஆதாரம் ஸ்டாலினின் கைகளுக்கு சென்றுவிட்டது என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் சூடுபட்ட புழுவாக துடிதுடித்துப் போயிருக்கிறார் ஒரு பெண் எம்.எல்.ஏ. இனி என்ன நடக்குமோ? என்னவாகுமோ! என்று தன் சகாக்களுக்கு போன் மேல் போன் போட்டு புலம்பி தீர்க்கிறார். 

ஸ்டாலின் கையிலிருக்கும் சி.டி.யில் சிக்கியிருப்பது எந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.? என்று அ.தி.மு.க. லிஸ்டில் தேடாதீர்கள். இவர் தி.மு.க.வின் பெண் எம்.எல்.ஏ.க்கள் லிஸ்டில் இருக்கிறார். யெஸ்! மாஜி அமைச்சரான டாக்டர் பூங்கோதைதான் அவர்.
தென் மாவட்ட தி.மு.க.வில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவரும், நடைபயிற்சியின் போது நாராசமாக வெட்டிக் கொல்லப்பட்டவருமான மாஜி அமைச்சர் ஆலடி அருணாவின் மகள்தான் டாக்டர் பூங்கோதை. கழக பணியில் பெரிய சாதிப்பு இல்லாவிட்டாலும், சார்பு அணியான தி.மு.க. மருத்துவரணியின் மாநில தலைவராக பின்னியெடுக்கிறார் பூங்கோதை.இந்த ஒரு காரணத்துக்காகவே அவருக்கு மீண்டும் சீட் கொடுத்தார் ஸ்டாலின். ஆலங்குளத்தில் நின்றார், வென்றார், எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் பூங்கோதை. 

இவருக்கும் திருநெல்வேலியின் மேற்கு மாவட்ட செயலாளரான சிவபத்மநாபனுக்கும் ஆகாதாம். கடந்த சில தினங்களுக்கு முன் கழுநீர்குளம் எனுமிடத்தில் தி.மு.க.வின் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக பூங்கோதைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

விழாவுக்கு வரும் வழியில் தான் கவனித்திருக்கிறார் சிவபத்மநாபனின் படம் பல பேனர்களில் இருந்திருக்கிறது. கூட்ட அழைப்பிதழிலும் அவரது பெயர் இருந்திருக்கிறது. இதில் டென்ஷனான பூங்கோதை ‘கிழக்கு மாவட்ட தி.மு.க.வுக்கும் மேற்கு மாவட்ட செயலாளருக்கும் என்னய்யா சம்பந்தம்? ஏன் அவரு போட்டோ இங்கே பளிச்சிடுது! என்னை டென்ஷனேத்தி பார்க்குறீங்களா? என்னால கூட்டத்துக்கு வரமுடியாது.’ என்று சொல்லி ஆவேசம் காடியிருக்கிறார். 

இதில் அரண்டு போயிருக்கிறார் கூட்ட ஏற்பாட்டளாரான முருகன். அவர் பூங்கோதையை சமாதானம்  செய்யும் முயற்சியில் இறங்கி, மடங்கி பேச....சிவபத்மநாபன் மேலிருக்கும் ஆத்திரத்தில் முருகனை பிடித்து தாறுமாறாக திட்டித் தீர்த்துவிட்டாராம் பூங்கோதை. எம்.எம்.ஏ.ம்மா என்னைய இப்படி திட்டுனாங்கன்னு வெளியில சொல்ல முடியாத அளவுக்கு மோசமான வார்த்தைகளாம் அவை. முருகனுக்கு காதில் ரத்தம் வராததுதான் குறையாம், அவ்வளவு வீவீவீவீவீவீரியமான வார்த்தைளென்கிறார்கள். 

முருகனின் மொபைலில் தானியங்கி அழைப்பு பதிவு வசதி (ஆட்டோமேடிக் கால் ரெக்கார்டர்) இருந்திருக்கிறது. இது புரியாமல் பூங்கோதை அவரை போட்டு தாளித்ததாக சொல்கிறார்கள். இந்த விவகாரம் அருவா மாவட்டமான திருநெல்வேலி தி.மு.க.வில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. 

இந்த விவகாரம் அப்படியே ஸ்டாலினின் காதுகளுக்குப் போக, அவர் அந்த ஆதாரத்தை கேட்டிருக்கிறார். இருட்டுக்கடை அல்வாவை கத்தியால் அலேக்காக பீஸ் போட்டு, சிறிய இலையில் வைத்து கொடுப்பது போல்  பூங்கோதையின் எதிரி டீம் அந்த ஆதாரத்தை சி.டி. போட்டு செயல்தலைவரின் கைகளில் கொடுத்துவிட்டது. 

இப்போது இதை நினைத்துத்தான் புலம்பிக் கொண்டிருக்கும் பூங்கோதை ‘நான்  ஒரு டாக்டர், இந்த மாதிரியெல்லாமா நடந்துப்பேன்? ரொம்ப சாதாரணமா வார்த்தையில்ல வாங்கண்ணே, போங்கண்ணே, ஏன் இப்படி பண்றாங்கண்ணே! அப்படின்னு நாகரீமாதான் பேசினேன். ஆனா வேற யாரையோ வெச்சு மோசமா பேச வெச்சு, அதை என் குரல்னு சொல்லி புகார் சொல்றாங்க.

எதிர்ப்பு அரசியல் பண்றதுக்கும் ஒரு அளவு இருக்குது. ஒரு லேடியை இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துவாங்க?” என்று மூன் டி.வி. போட்ட முக்காடில்  சிக்கிய சரவணனை போலவே பேசுகிறாராம்.  பூங்கோதை எடுத்து வைக்கும்  வாதங்களையும் கவனமாகவே எடுத்துக் கொள்கிறதாம் அறிவாலயம். 

ஆனாலும் கூட ஒரு டாக்டருக்கே ஆபரேஷனை நடத்திட்டானுவலே! கெட்ட பசங்க சார் நெல்லை தி.மு.க. காரங்க!

click me!