நாங்களும் ஒன்னும் திமுக கூட்டணியில் இல்லை என்றும், அவங்க எங்களுக்கு நண்பர்கள்தான் என்றும் திமுக பொருளாளர் துரை முருகனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, மதிமுக, விசிக, இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கின, ஆனால் இக்கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதே நேரத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்ததை இந்த மக்கள் நலக் கூட்டணி தடுத்தது என்றே சொல்லாம்.
இதனால் அந்த கட்சிகள் மீது திமுக கடும்பில் இருப்பது என்னவோ உண்மைதான். ஆனாலும், இடது சாரிகளும், விடுதலைச் சிறுத்தைகளும், கடந்த ஓராண்டாகவே பல்வேறு பிரச்னைகளில் திமுகவுடன் கரம்கோர்த்து செயல்பட்டுவருகின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் துரைமுருகன், “திமுக கூட்டணியே இன்னும் அமைக்கப்படவில்லை. இப்போது எங்கள் பழைய கஸ்டமர்களான காங்கிரஸும், முஸ்லிம் லீக்கும் மட்டும்தான் இருக்கிறார்கள். கூட்டணி என்பது சீட் ஷேரிங் எல்லாம் முடிந்த பிறகுதான் தெளிவாகும்.
இப்போது இருக்கிறவர்கள் எங்களின் நண்பர்கள். அவர்கள் கூட்டணிக் கட்சிகள் இல்லை. கூட்டணி அமையும்போது இதுநாள் வரை எங்களை ஆதரித்தவர்கள் சீட் பிரச்சினையில் முறுக்கிக்கொண்டு போகலாம்” என்று கூறியிருக்கிறார். அதாவது மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் திமுக கூட்டணியில் இல்லை என்று துரைமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுகவும் நாங்களும் நண்பர்கள் மட்டும்தான் என்று அவர் பதிலளித்தார். ஏற்கனவே திமுக கூட்டணியில் மதிமுக அதிருப்தியில் இருக்கும்போது தற்போது விசிகவும் முறுக்கிக்கொண்டுள்ளது.
இதே போல் இடது சாரி கட்சிகளும் கூட்டணி விஷயத்தில் கடும் கோபத்தில் உள்ளதால் திமுக கூட்டணி என தற்போது உள்ள கட்சிகள் சிதறும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.