ராகுலின் ரூ. 72 ஆயிரம் வாக்குறுதி... பாஜக தொண்டராக மாறிய நிதி ஆயோக் துணை தலைவர்..!

By Asianet TamilFirst Published Mar 26, 2019, 8:48 AM IST
Highlights

ஏழைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.72 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். 
 

ஏழைகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் ரூ.72 ஆயிரம் நிதி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

 
மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவினர் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு மாறாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே ராகுல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ராகுலின் இந்த அறிவிப்பை பாஜக கிண்டல் செய்துவருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமையும்.  நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.
இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக இருக்கும். மத்திய பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்றவே முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும்.” என்று தெரிவித்துள்ளார். 
திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் ஒரு சட்டப்பூர்வ அமைப்பை போல செயல்பட்டுவருகிறது. இந்த அமைப்பின் துணைத் தலைவர் எதிர்க்கட்சி அறிவித்துள்ள ஒரு திட்டத்தை பாஜக தொண்டரை போல விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!