மத்திய அமைச்சராகும் ஓபிஆர்... கொதிக்கும் சீனியர்கள்.. அணைக்கும் இபிஎஸ்.. பின்னணி என்ன?

By Selva KathirFirst Published Oct 10, 2020, 11:12 AM IST
Highlights

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினத்தன்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்று திரும்பினார் ஓபிஎஸ்சின் மூத்த ஓபிஆர். இதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே ஓபிஆரை மத்திய அமைச்சராக்குவதற்கான முஸ்தீபுகள் என்பது தெரியவந்துள்ளது.
 

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தினத்தன்று அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்று திரும்பினார் ஓபிஎஸ்சின் மூத்த ஓபிஆர். இதன் பின்னணியில் நடந்த சம்பவங்கள் அனைத்துமே ஓபிஆரை மத்திய அமைச்சராக்குவதற்கான முஸ்தீபுகள் என்பது தெரியவந்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயற்குழுவின் போது தொண்டர்களை திரட்டியது முழுக்க முழுக்க ஓபிஆர் தான். செயற்குழு அரங்கிற்குள் தனது தந்தை ஓபிஎஸ்சுக்கு ஆதரவு இல்லை என்பதை தெரிந்து செயற்குழு நடைபெற்ற அரங்கிற்கு வெளியே தொண்டர்களை குவித்தார் ஓபிஆர். ஓபிஎஸ் அங்கு வந்த போது வருங்கால முதலமைச்சர், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்றெல்லாம் முழக்கங்கள் விண்ணை பிழந்தன. மயிலாப்பூர் உள்ளிட்ட கோவில்களில் இருந்து அர்ச்சனைகளுடன் ஐயர்கள் ஓபிஎஸ் வீடு முன்பு தடல் புடல் ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்த வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்விட்டரில் தகவல் வெளியிட்ட மறுநாள் தேனி சுற்றுவட்டாரங்களில் வருங்கால முதலமைச்சர் ஓபிஎஸ் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதே போல் செயற்குழுவிற்கு பிறகு தேனி சென்ற ஓபிஎஸ்சை வருங்கால முதலமைச்சர் என்று 100 அடி நீள பிளக்ஸ்பேனருடன் வரவேற்றனர். இவை அனைத்துமே ஓபிஎஸ் மகன் ஓபிஆர் ஆசியுடன் நடைபெற்றதாகவே கூறுகிறார்கள்.

இப்படி முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த பிறகு முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆட்சிகளை திரட்டிய ஓபிஆர் திடீரென அவரை சந்தித்து ஆசி பெற்றது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இது குறித்து விசாரித்த போது தான் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக்க ஓபிஎஸ் விதித்த நிபந்தனைகளில் மிக முக்கியமான நிபந்தனை தனது மூத்த மகன் ஓபிஆரை மத்திய அமைச்சர் ஆக்க வேண்டும் என்பது தானாம். கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்து மோடி  தலைமையில் மத்திய அமைச்சரவை பதவி ஏற்க இருந்த சமயத்தில் அந்த பட்டியலில் ஓபிஆர் பெயர்இருந்தது.

பதவி ஏற்புக்கு முதல் நாள் மத்திய அமைச்சர்களுக்கு மோடி தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியிலும் ஓபிஆர் பெயர் இருந்தது. ஆனால் மறுநாள் ஓபிஆர் மத்திய அமைச்சராக பதவி ஏற்கவில்லை. இதற்கு காரணம் அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்த அரசியல் என்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று இரண்டு மத்திய அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று எடப்பாடி தரப்பில் இருந்து அப்போது வலியுறுத்தப்பட்டதாகவும், ஓபிஆருக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் பிரச்சனை வரும் என்று அவர்கள் கூறியதன் பேரில் அவரைமத்திய அமைச்சர் பட்டியலில் இருந்து தூக்கியதாக சொல்வார்கள்.

அதன் பிறகு மோடி தனது அமைச்சரவையில் மாற்றம் செய்த போதும் ஓபிஆர் மத்திய அமைச்சராக வாய்ப்பு உருவானது. ஓபிஎஸ் டெல்லி சென்று திரும்பினார். இந்த முறையும் எடப்பாடி தரப்புபோட்ட முட்டுக்கட்டையால் ஓபிஆரின் மத்திய அமைச்சர் கனவு நனவானது. ஆனால் தற்போது ஓபிஆரை மத்திய அமைச்சராக்குவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பே ஓபிஎஸ்சிடம் உறுதி அளித்ததாக கூறுகிறார்கள். இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டே முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடியை ஓபிஎஸ் மகிழ்ச்சியுடன் அறிவித்ததாக சொல்கிறார்கள்.

அந்த வகையில் தன்னை மத்திய அமைச்சராக்க உறுதி மொழி அளித்த எடப்பாடி பழனிசாமியை ஓபிஆர் மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து திரும்பியதாகவும் கூறுகிறார்கள். இதற்கிடையே கட்சியில் சீனியர்கள் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, முகமது ஜான் என மாநிலங்களவை எம்பிக்கள் இருக்கும் நிலையில் ஓபிஆருக்கு மத்திய அமைச்சர் பதவி எதற்கு என்று புகைச்சல் எழுந்துள்ளது. இதனை சமாளிக்க மத்திய பாஜகவிடம் இரண்டு மத்திய அமைச்சர்கள் பதவி கேட்டு அதிமுக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!