புதுக்கோட்டை
தமிழக அரசியலில் புதிது புதிதாக ஒளிரும் மத்தாப்புக்கள் சில மணி துளிகள் வண்ணம் காட்டும். கடைசியாக சாம்பலாக மண்ணோடு மண்ணாகும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு ஒன்றியச் செயலர் ஆர். ரெங்கராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் பி.கே .வைரமுத்து முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பங்கேற்று பேசினார். அவர், "பல்வேறு தரப்பினருக்கும் நலத் திட்டங்களை வாரி வழங்கி மறைந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
தமிழக அரசியலில் புதிது புதிதாக ஒளிரும் மத்தாப்புக்கள் சில மணி துளிகள் வண்ணம் காட்டும். கடைசியாக சாம்பலாக மண்ணோடு மண்ணாகும்.
ஆனால், அதிமுக எப்போதும் இரும்புக்கோட்டையாக இருக்கும்" என்றார்.
மாவட்ட மாணவரணிச் செயலர் பி.பாண்டியன், ஒன்றிய துணைச் செயலர் யு.குமார், கே.எம்.முத்து , எம்.ஆனந்தகுமார், ஆர்.எஸ்.முத்துக்குமார், எஸ்.சாத்தார், எம்.பெரியசாமி, ஐயா.செந்தில்குமார், பிரான்ஸிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.