
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வாக்குறுதி அளித்தது குறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்து உள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ’’நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். மோடியே மீண்டும் பிரதமர் ஆவார். பெரும்பான்மை இல்லையெனில் நானோ, நிதின் கட்காரியோ பிரதமர் ஆவோம் என கூறுவது கற்பனை. அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சாதி, மதம் மற்றும் சமயத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது. இந்து, முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது.
2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை. கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் கூறினோம். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது’ என ராகுல் காந்தி கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’’ என்று அவர் தெரிவித்தார்.